நிலவோடு வந்தாளை
சலவைக்கா ரன்சொல் செவிமடுத்து ராமன்
நிலவோடு வந்தாளை நற்கற்பின் தேவதையை
காட்டிற் கனுப்பினான் கல்நெஞ்ச னாய்மன்னன்
நாட்டிற் கெடுத்துக்காட் டாய்
யாப்பு சார் தகவல்கள் :
---இது இருவிகற்ப இன்னிசை வெண்பா
---- சல நில காட் நாட் --- அடி எதுகைகள்
---ச செ நி ந கா க 1 3 ஆம் சீரில் மோனை
ஈற்றடியில் நா டா இரண்டிலும் ஆ ஒலிகொண்டு நெடில் மோனை எனக் கொள்க
---சலவைக்கா ரன்சொல் ----கல்நெஞ்ச னாய்மன்னன் வகையுளி
சீர் கருதி சொல் பிளவுபடல் வகையுளி
கவிதையின் கதைக்குறிப்புகள் :---
நிலவோடு வந்தாளை ---பாற்கடலைக் கடையும் போது சந்திரனுடன் இலக்குமியும்
வந்தாள் திருமாலுக்கு மாலையிட்டாள்
அந்த இலக்குமிதான் திருமால் ராமனாய் அவதரித்த போது சீதையாக அவதரிக்கிறாள்
---இராவணனை போரில் வென்று சீதையை மீட்டு அயோத்தி வந்து நல்லாட்சி
நல்கி வந்த இராமன் ஒருநாள் இரவில் மாறு வேடத்தில் நகர்வலம் வரும்போது
சலவைக்காரான் ஒருவன் தன் மனைவியிடம் சீதையின் கற்பு பற்றி
வினா எழுப்பியதை செவிமடுத்து கல்நெஞ்சனாய் கற்பினுக்கணங்கினை
காட்டிற்கு அனுப்புகிறான் மன்னன் நல்ல மன்னன் நாட்டினருக்கு
நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டும் என்று எண்ணினான் போலும்