வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும் – நாலடியார் 399
நேரிசை வெண்பா
(’ங்’ ‘ம்’ மெல்லின எதுகை)
முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலுமென்
தீம்பாவை செய்த குறி. 399
– காமநுதலியல், நாலடியார்
பொருளுரை:
நேற்று என்மகள் தன்னுடைய முலைக்காம்பும் முத்துவடமும் அழுந்தும்படி என் உடம்பு முழுமையும் அணைத்துக்கொண்ட உண்மையை யான் சிறிதும் அறியாமற் போனேன்;
அது மான்கூட்டங்கள் வேங்கைக்கு அஞ்சிச் சிதறும் காட்டு வழியில் இன்று பிரிந்து செல்லுதற்குப் போலும் அழகிய பாவை போல்வாளான என்மகள் அவ்வாறு செய்த அடையாளம்!
கருத்து:
தாயின் அன்பினையும் மறக்கும் ஆழ்ந்த காதலன்பினால் காமம் இன்பப் பேறுடைய தாகின்றது.
விளக்கம்: இது, மகள் போக்கிய தாய் வருந்திக் கூறியது.