பழச்சாறு

பழச்சாறு..!
==========

சித்திரையும் கத்திரியும் சினம் கொண்டு பார்க்கும்
தணல் தனித்து போகுமந்த கனிரசங்கள் கேட்கும்
கடவுள் தந்த வரமாக வகை வகையாய் கனிகள்
கோடையிலே விளையும்கனி இனிப்பில் தேன் சுவைகள்..!

காந்த அலை வீசினாலும் கவலை என்பதில்லை
கனிரசத்தில் மிதந்திருக்க கோடை சுடுவதில்லை
செம்முத்து மாதுளையின் சாறெடுத்துக் குடிப்போம்
செங்கரும்பு சாறுண்டு மகிழ்ச்சியிலே திளைப்போம்..!

முலாம் கிருணி தர்பூசணி சந்தையெங்கும் சிரிக்கும்
சர்க்கரையின் சங்கமிப்பில் சத்துணவும் கிடைக்கும்
முப்பொழுதும் கோடையிலே இவ்வுணவே விருப்பம்
எப்பொழுதும் கிடைப்பதில்லை என்பதிலே வருத்தம்..!

கோடையிலே இறைச்சியுணவு ருசித்திடுமா கூறு
தணலை யள்ளி வீசுகையில் எடுக்குமா வாய்சோறு
சாத்துக்குடி திராட்சையென நாளொரு கனிச்சாறு
தேடி சுவைத்துப் பருகிடவே வெய்யிலும் வெகு ஜோரு..!!

முக்கனியில் ஒரு கனியாம் மாம்பழம் பலரகத்தில்
தேனினிமை சுவையாவும் விதவிதமாம் பழரசத்தில்
பணம்படைத்த வர்க்கத்துக்கு ஆப்பிள்ஆரஞ் சுண்டு
ஏழைக்கெல்லாம் தேவகனி எலுமிச்சைதான் விருந்து..!!

எழுதியவர் : சொ.சாந்தி (26-Apr-25, 11:48 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 29

மேலே