உதவி புரி உயிருள்ளவரை
#உதவிபுரி...உயிருள்ளவரை...
எத்திசை நோக்கிலும் நல்லோர் வேடத்தில்
எத்தர்கள் எக்காளமே
சித்தம் மயங்கிடின் சாய்த்து மகிழ்வரே
சீராவ தெக்காலமே. !
தொண்டு செய்வதாய் உண்டியல்
ஏந்தியே
ஊரினில் கையேந்துவார்
உண்டியல் நிறைத்துப்பின்
உந்தி பெருத்திட
உல்லாச மேகிடுவார்..!
பண்புடை யோனெனப் பக்கத்
தாளமொடு
பறையு மடித்திடுவார்
நண்பகல் கொள்ளைகள் நயமாய்ப்
புரிந்தவர்
நாணயராய்த் திரிவார்..!
குள்ள நரிகளும் தோற்கும் படியென
கொடியோர் கூட்டமடா
பள்ளம் பறிக்கும் பலரின் பாதையில்
பாசாங்கும் காட்டுமடா..!
தெள்ளத் தெளிந்து நீசர்கள் நீக்க
நிம்மதி சேருமடா
உள்ளத் தூய்மை கொண்டோர் வாழ்வில்
உன்னதம் நேருமடா..!
இருக்கும் வரையில் இனியவை கூட்டி
இன்னல் தொலைத்திருப்போம்
பிறந்தோம் வாழ்வோம் பிறருக் குதவியே
பேரின்பம் நிலைத்திருக்கும். !
#சொ.சாந்தி