வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் விருந்தோம்பல் பெண்டீர் சிறப்பு - சிறுபஞ்ச மூலம் 42

நேரிசை வெண்பா

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித் - திருவாக்குந்
தெய்வதையும் எஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டீர் சிறப்பு! 42

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

தம்கணவரது வரும்படிக்குத் தகுதியாகிய வழங்குதலை (செலவை)த் தெரிந்து (செய்து), பந்துக்கள் (தங்கள் கோபச் சொல்லால்) பயந்தொதுங்காமல், (அவர்களை) விரும்பி விருந்தினரைப் பேணி செல்வத்தை மென்மேலும் உயரச் செய்கின்ற தெய்வத்தையும் எப்பொழுதும் தெளிவாகிய வணங்குதலைச் செய்வதே மாதர்க்குரிய சிறப்புகளாம்.

கருத்துரை:

இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவினளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும், சுற்றந் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.

சுற்றம் – சூழ்வாரை யுணர்த்தியது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Oct-25, 4:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே