இன்னொரு கிளியோபாட்ரா
சிலுக்கு சிங்காரி
சில்க் ஸ்மிதா
...............................
நல்லவேளை சில்க் ஸ்மிதா
கிளியோபாட்ரா காலத்தில்
பிறந்திருக்கவில்லை...
கிளியோபாட்ராவிற்காக சண்டை
போட்டவர்கள் இவளுக்காகவும்
சண்டை போட்டிருப்பார்கள்..
ஆயிரத்து தொள்ளாயிரத்து
நாற்பதுகளில் நடந்த இரண்டாம்
உலகப்போர் வரிசைக்கிரமத்தில்
மூன்றாம் இடத்துக்கு
தள்ளப் பட்டிருக்கும்..
சில்க்கை சினிமாவில்
பார்த்த பின் சில பெண்கள்
தாமும் கருப்பாய்ப்
பிறந்திருக்கக் கூடாதா என்று
ஏங்க ஆரம்பித்தார்களாம்...
பிரம்மன் சில்க்கையும்
அவளின் கண்களையும்
படைத்த பின்பு புவியின்
ஈர்ப்பு விசை சற்று குறைந்து
போனதாய்க் கேள்வி...
ஆடல் கலையில் சில்க்
ஏற்படுத்திய அதிர்வுகள்
இன்னும் அடங்கவில்லை...
பரதநாட்டியம் பார்த்த பின்பு
மேற்கத்திய நடனமும் மேற்கத்திய
நடனம் கண்ட பின்பு பரதமும்
தேடும் கண்களுக்கு.. சில்க்
நடனம் கண்ட பின்பு
சில்க் நடனமே தேடும்...
பிரம்மன் மனிதனைப் படைத்தான்
மனிதன் சிலைகளைப் படைத்தான்
அழகுச் சிலைகளின் கவர்ச்சி
அம்சங்களில் பயிற்சி எடுத்து
பிரம்மன் இவளைப் படைத்தானோ
குறையொன்றும் இல்லை...
அழகில் இவளோர் அச்சுக்குண்டு
ஆடைகளால் இவள்
அழகானாளோ இல்லையோ..
ஆடைகள் இவளால் அழகாயிற்று..
இவளின் ஆடைச் சிக்கனத்தில்
பொருளாதாரம் அடைந்தது
மேம்பாடு.. அதில் இளைஞர்கள்
அடைந்தனர் உடன்பாடு...
அச்சாரத்தப்போடு கச்சேரியக்கேளு
பாடலில் கமலும்
ஆடிமாசக் காத்தடிக்க
பாடலில் ரஜினியும்
சில்க்கோடு ஆட சற்றுத்
திணறியதாய்த் தோன்றும்..
தோட்டத்தில் ரப்பர்
பார்த்திருக்கலாம்.. இங்கு ஒரு
தோட்டமே ரப்பர் ஆகிப் போனது..
இந்த ரப்பருக்கு மட்டும்
மீட்சி எல்லை என்பது
இல்லாமல் போனது...
எண்பதுகளில் சில்க்
நடிக்காத படம் ஓடுவதில்லை...
நடித்த படங்கள் தியேட்டரை விட்டு
அவ்வளவு எளிதில் ஓடுவதில்லை..
சில்க் நடித்த படம் ஓடும்
திரையரங்குகள் வாலிபர்களின்
கோடை வாஸஸ்தலங்கள்
மட்டுமல்ல.. குளிர் வாஸஸ்தலங்களும் கூட..
ஆடைகள் அவ்வளவாய்
இவள் தேகம் மறைப்பதில்லை
மறைக்கும் ஆடைகளும் இவள்
அழகு சொல்ல மறுப்பதில்லை.
இவளது அழகில் தொலைந்து
போன ஆண் இதயங்கள் பல
இன்னும் மீட்கப்படவில்லை என்று
அறிக்கை ஒன்று கூறுகிறது...
இளைஞர்களின் இன்பக் கவிதை
இவள்.. இருந்தும்
இவள் இறுதியில் சோகக்
கவிதை ஆகிப் போனாள்..
சினிமாவின் ஒரு தலைமுறை
இவளைச் சுற்றி வந்திருக்கிறது...
இவளோ எதைச் சுற்ற
இந்த பூவுலகு நீங்கினாள்...
துள்ளித் துள்ளி ஆடிய இந்த
கவர்ச்சிப் பந்தின் மூச்சுக்காற்று
ஏன் வெகுசீக்கிரம் நின்று போனது..
நன்றாகத்தானே ஓடத்துவங்கியது
இந்த வண்டிச்சக்கரம்.. பின்
ஏன் இது ஓடுபாதையில்
தன் பயணத்தை இடையில்
நிறுத்திக் கொண்டது...
பதினேழு வருட சினிமா
வாழ்க்கையில் நானூற்று
ஐம்பத்தேழு சினிமாவில் நடித்த
அற்புத சாதனை இவளுடையது..
முப்பத்தொன்பதில் மரித்த
கிளியோபாட்ரா ஈராயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
சரித்திரத்தில் வாழ்கிறாள்...
முப்பத்தாறில் மரித்துப்போன
சில்க் ஸ்மிதாவும் சினிமா
உள்ளளவும் ரசிகர்களின்
மனங்களில் வாழ்வாள்...
நாற்பதுக்குள் மரித்து நூறாண்டு
சாதனை செய்தவர் பட்டியலில்
சில்க்கின் பெயரும் இடம் பெறும்..
சினிமா இருக்கும் வரை
இந்தக் காந்தப் புயல் வீசும்..
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
👍🌹😍❤️

