மறியலில் மக்கள்

எரிச்சல்
தாங்கவில்லை
கண்களில்
இரவு முழுவதும்
தூக்கமில்லை !

தெளிய வைத்து
தெளிய வைத்து
அடிக்கும்
போலிஸ்காரன் போலவே
தூங்க வைத்து
தூங்கவைத்து
எழுப்பிவிடுகிறது
அரசாங்கத்தின்
கரண்ட் கட்

கொசுக்கள் ஒன்றாய்க்
கூடி கும்மாளமிடுகின்றன
எனது உடலில்
கரண்ட் இல்லாமல்
கைகளால் விரட்டுவது
அவ்வளவு எளிதாயில்லை

என்ன செய்வது
எனப் பேருந்தில்
சென்ற வேளை
மறியலில் மக்கள்

போராட்ட விளக்க
கூட்டங்கள் ஏதும்
முன்னரே நடத்தவில்லை!
ஏன் போராட வேண்டும்
எனும் தயாரிப்பு
முழக்கங்கள் ஏதுமில்லை !

எதற்காக மறியல்
என்றார்கள் !
கரண்ட் கட்டிற்கு எதிராய்
என்றவுடன்
சென்றவர்கள்
வந்தவர்கள் எல்லோரும்
மறியலில் இணைந்து
நிற்க
திக்கு முக்காடி
திணறித்தான் போனது
அரசு இயந்திரம் !

கைது செய்வோம் என்றார்கள்!
கைது செய்யுங்கள்
என்றார்கள் கைக்குழந்தைகளோடு
மறியலில் நின்ற பெண்கள்

மிரட்டிப்பார்த்தவர்கள்
பின்பு கெஞ்சினர்!
இன்று இரவு கரண்ட்
கட் கிடையாது என
உறுதி அளித்த பின்னரே
கலைந்தனர் மக்கள் !

அநீதி கண்டு
திரண்டு எழும் மக்கள்
முன்னால்
அரசு இயந்திரம் தூள் !
தூள் ! தூளாகும் !
முழக்கம் எழுப்பியிருக்கிறேன்
நான் !
செய்முறை விளக்கம் காண
வாய்ப்புக் கிடைத்தது
மதுரையில் !

எழுதியவர் : வா.நேரு (3-Mar-12, 11:27 am)
பார்வை : 236

மேலே