இடைவெளிகளில்....

உன்னிடம் -

நான் சொல்ல மறுத்த
ஒற்றை வார்த்தையின் மேல்
உறைந்து நிற்கிறது

தினமும் துயர் துளிர்க்கும்
காலம்.

என்மேல் நகரும் தவிப்புடன்
நீண்டு-
முடிவுறா இடைவெளிகளில்..
ஈரம் சொட்டுகிறது
உன் இதயம்.

ரோஜாக்களின் வாசனை
என்னைத் தாண்டும் சமயங்களில்
எப்படியோ-
உனது வாசனை கடத்தப்படுகிறது
எனது எல்லைகளுக்கு.

தினமும்-
பாதியில் தொலைந்து விடும்
ஒரு கனவில்...
என் விழிகளில் நீந்தும்
உன்னைத் துரத்துகிறேன்...

நீ அறியாத படி.

பின் தவித்திருக்கிறேன்...

பாதிக் கனவுகளோடும்...
மீதிக் காலங்களோடும்....

நானே உருவாக்கிய
இடைவெளிகளில்.

எழுதியவர் : rameshalam (25-Jul-12, 12:57 pm)
Tanglish : idaivelikalil
பார்வை : 178

மேலே