வேளச்சேரி (வெள்ளச் சேரி)

ஏரி மேல மண்ணை கொட்டி
மாடிமேல மாடி கட்டி
ஊரு கதை பேசி வந்த

மாரி மழை பேஞ்சதுமே
ஊருக்குள்ள ஏரி வர
ஏரிக்குள்ள வீடிருக்க
மாட்டிகிட்ட என்ன செய்வ ?

காருக்குள்ள பாட்டு பாட
பாட்டுச் சத்தம் வெளிய வர
பளபளன்னு நீ உடுத்தி
பகட்டாக போன மச்சான் !

காருக்குள்ள நீரு வர
தேரிழுத்து தெருவில் விட்டுட்ட
யாரு வந்து கார் எடுக்க ?
வா என்னோடு நடக்க .

வீட்டு குப்பை தெருவில் கொட்டி
வீற்றிருந்த வீணர்களே ?
வீதி மொத்தம் வீடு மட்டம்
வீட்டுக்குள்ளயே கொட்டிக்கலாம்
வீதிக்கு வரக்கூட தேவையில்லை.

மாடி வீட்டு முட்டை ஓடு
குடிசை வீட்டு தேங்காய் ஓடு
தையல் வீட்டு கந்தல் துணி
கடைக்காரரின் அழுகிய தக்காளி
பலரும் வீசும் பாலித்தின் பை
சமத்துவமாய் மிதக்கிறது சமுதாய சாக்கடை

ஒரு மழை தங்காத கவுன்சிலரின் சாலை
பல்லை இளிக்கிறது ஜல்லிகள்
தடங்கல் தடங்கலாய் தடங்கள்!

தண்ணீர் தேங்காத சாலைகள்
சேர் அடிக்காத வேஷ்டிகள்
ஆள்பவர் மட்டுமே வாழ்பவர்
வாழ்பவர் எல்லாம் பணிந்தவர்
ஒழிந்து போ சமுதாயமே !!!..

எழுதியவர் : (22-Sep-12, 4:44 pm)
சேர்த்தது : kumizhi
பார்வை : 180

மேலே