வாழி சக்தி வளமீந்தாய் !

என்ன தவம் செய்தேன் சக்தி -ஆகா
இத்தனை அன்புடன் என்னைப் படைத்தாய்
மின்னலின்றி ஒளிவெள்ளம் ஒரு
மேகமின்றிக் கொட்டும் தூறலைப் போலும்
பொன்னை நிகர்த்தன வாக -உள்ளம்
பூத்திடவே கவி சொல்லென்று விட்டாள்
என்னவெண்ணி உயர் வென்னும் - படி
ஏற்றியெனை இன்பம்கொண்டிடச் செய்தாள்

மன்னவன், பொன்முடியில்லை - இவன்
மாசறு வேந்தன் ஓர்மந்திரி யில்லை
பன்னரும் கொத்தளம் கூடம் - பெரும்
பண்டகசாலை படைகளுமில்லை
இன்னிசைக் கூத்தனர் இல்லை - மன்னர்
இச்சைகொள் அந்தபுரங்களும் இல்லை
பொன்குவை கொள் திறைசேரி - அதில்
பூட்டி வைக்கும் முத்துரத்தின மில்லை

கன்னியர் கூடிநின்றாடும் - குளிர்
காற்றெழும் சோலையும் நந்தவனங்கள்
தன்னகம் கொண்டவனில்லை - ஆயின்
தந்த பெருமைக்கு ஒர்குறைவில்லை
நன்னிளம் தென்றலும் வீசும் - அதில்
நாடிமனம் கொள்ள பொன்நிழல்போலும்,
இன்பமெழும் விளையாடும் - அதில்
உள்ளபொருள் மனமேற் றொளிகாணும்

பென்னம்பெரு வலு தந்தாள் - கவி
பேசரும் நாவளம் கொள்ளவும் செய்தாள்
உண்மையென்னும் முடிசூடி - பலர்
உள்ளங்கள் ஆண்டிடும் உன்னத ஆட்சி
எண்ணம் அரண்மனை யாகும் - அதில்
எததனை சாளரம் அற்புதமாடம்
பண்ணொடு கீதம் இசைக்கும் -அதில்
பற்பல ராகமெழுந்து மயக்கும்

ஆளும் பலமன தேசம் - அதில்
அன்புஎனும்குவை கொட்டிக் கொடுத்தாள்
நாளும் புகழுடன் வாழும் - அசைந்
தாடி நடந்திடும் வாழ்வென்னும் தேரும்
வாழு பல்லாண் டென விட்டு- அதில்
வண்ணமன தின்பம் கொண்டிடச் செய்தாள்
நாளும் வரும் சுடர்வானில் - அதன்
நல்லொளிபோல் நலம்கொண்டிட வைத்தாள்

எழுதியவர் : கிரிகாசன் (2-Nov-12, 3:50 am)
பார்வை : 236

மேலே