பகை வீழ்த்த துடிக்கும் என் கரங்கள்

இதோ!
அந்த சீருடையில் நீயிருக்கம் நிமிர்ந்த புகைப்படம்
எனக்குள் உணர்வேற்றிக்கொண்டிருக்க
பொறிக்கும் உன்னிரு விழிகளால்
தணலாகி கிடக்கின்றது
பகை வீழ்த்த துடிக்கும் என் கரங்கள்.

சாவையுன் வாசலுக்கே
வரவழைத்து கருவியேந்தி
எம்முயிரை காப்பாற்றிய உனக்கு
நிராயுத பாணியாய்
வெட்க உணர்வோடு
கூப்பித்தொழும் கரங்களுக்குள்
பதுங்கிக் கிடக்கின்றது
மறுபடி பாயும் மகிழ்வு நாள்.

அழிக்கப்பட்டதுவாய்
அறிவிக்கப்பட்ட என்னுயிரில்
ஊற்றெடுக்கும் பெரும் பாய்ச்சல்
வெளிக்கசியாமல்
அடைக்கப்பட்டிருக்கின்றன
பதுங்கலின் தர்மமாய் !

பெருமிருளாய் விரைகின்ற கொடுமை வாழ்விலும் உன் வழியில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
தனித்து..........

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (26-Nov-12, 4:22 pm)
பார்வை : 154

மேலே