மின்சாரம்

விடுமுறைநாள்....
அம்மா சமையலறையில் மிக்ஸ்யில் எதையோ போட்டு சிந்தாமல் இருக்க அதன் தலையில் கையை வைத்து அறைத்துக்கொண்டிருந்தார்.
ஹாலில் அப்பா கருப்பு வெள்ளை பாடல்களை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அருகில் எனது மகன் பேன் காற்றில் முன்னிரு முடிகள் பறக்க உறங்கிக்கொண்டிருந்தான்.
மனைவியோ தலைக்கு குளித்துவிட்டு டிரையெரில் முடிகளை உலர்த்திக்கொன்டிருக்க...,
அறையில் நான். வழக்கம் போல கணினியில் பேஸ்புக்.
நமது ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக் வந்திருக்கு என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். புதிதாக 2 கமெண்ட். என்ன என்ற ஆர்வத்தில் மவுசை க்ளிக் செய்தால் அது வேலை செய்யவில்லை. ஒரு தட்டு தட்டி விட்டு மறுபடி கிளிக்கினேன், பலனில்லை.
பின்னால் கேபிள் எதாவது கழண்டு இருக்குமோ என்று பின்னால் கையை வைத்தால்,..... சுரீர்ர்ர்ர்ர்.... மின்சாரம் பாய்ந்தது.. "ஐயோ அம்மா " அலறினேன். கையை எடுக்க முடியாமல் துடிக்கிறேன். கண்கள் சொறுகிவிட்டது.
திடீரென்று கன்னத்தில் ஒரு அடி.
கண் விழித்தால் எதிரில் அம்மா கையில் மிக்ஸி ஜாருடன்...
"அம்மா......, கரண்ட்......, ஷாக்......" வார்த்தை வராமல் விழித்தேன்.
"என்னடா கரண்ட்.. ஷாக்.... மணி 8 ஆச்சு இன்னும் என்னடா தூக்கம்."
"இல்லேம்மா கனவு.... கம்ப்யூட்டர்ல ஷாக் அடிச்சிடுச்சி."... என்றேன்.
"ஆமா இல்லாத கரண்ட் இவன மட்டும் அடிக்குதாம்", "கனவுல மட்டும் தான் கரண்ட் இருக்கும். போடா போய் இந்த தேங்காவ அம்மியில அரச்சிட்டு" என்றார்.
"என்ன வாழ்க்கடா இது"
புலம்பலுடன் புறப்பட்டேன் அம்மியை நோக்கி......

விக்ரம்.

எழுதியவர் : விக்ரம் (15-Dec-12, 3:13 pm)
Tanglish : minsaram
பார்வை : 387

மேலே