ஆண்டொன்று போனால்...... ஆண்டொன்று போனால் அற்புதங்கள் நடக்கும் காண்பதற்கு...
ஆண்டொன்று போனால்......
ஆண்டொன்று போனால் அற்புதங்கள் நடக்கும்
காண்பதற்கு காட்சி கண் திறந்து பார்த்தேன் !!I
ஆண்டொன்று போனது அற்புதங்கள் நடந்தன
மாண்டவர் மீண்டனர் மாதரை மதித்தனர் !!!
நீதி நிமிர்ந்தது நியாயம் துளிர்த்தது
சாதி ஒழிந்தது சமயம் அழிந்தது !!!
முட்டாளின் அறிவுக் கண் முழுதுமாய் திறந்தது
எட்டாத கனிகளும் எட்டுகிற இடத்திலே !!!
சாமரம் வீசி நின்று சாதிக்கா நிலையொழித்து
பாமரர் என்ற கீழ்மை போக்கொழிந் துயர்ந்து நின்றார் !!!
கையேந்தி நின்றலைந்த காட்சிகள் மறையலாச்சி
நையாண்டி நாடகத்தால் நாடழிதல் குறையலாச்சி !!!
சரித்திரம் மாறலாச்சி சத்தியம் நிலைக்கலாச்சி
தரித்திரம் தொலையலாச்சி தத்துவங்கள் புதுமையாச்சி !!!
விழலுக்கே நீரிறைத்து வீணான காலம் மாறி
வயலுக்கு நீரிறைக்க வாழ்க்கையோ வளர்ச்சி !!!
சாராய சாம்ராஜ்யம் சரிந்து விட்டது
சந்நியாசி சமாசாரம் புரிந்து விட்டது!!!
ஆராய்ந்து வாக்களிக்கும் அறிவு வந்தது
ஆள்வோரும் அதிசயமாய் ஆன்றோர் ஆனார் !!!
என்னே என்னேஎன்று வியந்து போனேன்
என்னையும் மதித்தார்கள் ஏற்றம் தந்தார் !!!
பன்னீரும் தெளித்தார்கள் பட்டில் போர்வை
படபடத்துப் போனேன் நான் பயந்தும் போனேன் !!!
ஏறெடுத்துப் பார்ப்பதற்குள் விழி மருண்டு போச்சி
எடுத்தெறிந்து சொல்வதற்குள் வழி இருண்டு போச்சி !!!
"கூறு கேட்ட கோமானே! " குரல் கேட்டு எழுந்தேன்
கை இடுப்பில், விழி அடுப்பில், கட்டியவள் தான் !!!
பகற் கனவா கண்டேன்? பலித்திடுமோ பார்ப்போம்
சுகக் கனவு போச்சி; சுய நினைவுக் காட்சி !!!
ஆண்டொன்று போனால் அடுத்துவரும் தேர்தல்
அடுத்து வரும் தேர்தலில் அருகிவிடும் வேர்கள் !!!
மாண்டுவிடும் மாண்பு; மாறிவிடும் பண்பு
மாறிவிடும் கட்சிகள்; மாறாது வாழ்க்கை...!!!
ஆக்கம்: மருத்துவர் அய்யா குப்பாச்சாரி அவர்கள்.