எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகம் ...--> கவிப்பேரரசு வைரமுத்து. -------------------------------------------- உன்னைப் பார்த்து...

உலகம் ...--> கவிப்பேரரசு வைரமுத்து.
--------------------------------------------
உன்னைப் பார்த்து உலகம்
உரைக்கும்
தன்னம்பிக்கை தளரவிடாதே !

இரட்டைப் பேச்சு பேசும்
உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டுவிடாதே !

ஒவ்வொரு வாயிலும்
ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு !

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்கு சொல்கிறேன்
உள்ளத்தில் எழுது !

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை
லேகியம் என்றது !

திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமேலழகரை
வரச்சொல் என்றது !

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில்
குதிரை என்றது !

எலியட், நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம்
திருடியதென்றது !

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி
வழியுது என்றது !

அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்கு
கண்மை என்றது !

மேடையில் கால்மேல் காலிட்டமர்ந்தேன்
படித்த திமிர்தான்
பணிவில்லை என்றது !

மூத்தோர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் அல்ல
காக்கா என்றது !

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான்
கவனம் என்றது !

விரல்நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான்
ஆபத்து என்றது !

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன்
புதைந்தான் என்றது !

மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன்
தள்ளிநில் என்றது !

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான்
பாவம் என்றது !

மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கிவிட்டதா ?
மிருகம் என்றது !

பணத்தில் பொருளில் பற்றற்று இருந்தேன்
வறுமையின் விந்துவில்
பிறந்தவன் என்றது !

என்னை தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை
பூர்ஷ்வா என்றது !

சொந்த ஊரிலே துளிநிலம் இல்லை
இவனா ?
மண்ணின் மைந்தன் என்றது !

தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான்
பாமரன் என்றது !

கயவர் கேட்டார் காசு மறுத்தேன்
கறக்க முடியா
கஞ்சன் என்றது !

உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித்திறியும்
ஊதாரி என்றது !

மங்கையரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற
கர்வம் என்றது !

பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன்
கண்களை கவனி
காமம் என்றது !

திசைகள்தோறும் தேதி கொடுத்தேன்
ஐயோ புகழுக்கு
அலைகிறான் என்றது !

நேரக்குறைவு நிறுத்திக்கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான்
கவிஞன் என்றது !

அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,
இப்படி இருந்தால்
இதுவும் தப்பு .

கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து
தானே குரைக்கும் .

உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை
இறுக்கி மூடிடு !

உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை
மூடுதல் சுலபம்...

-கவிப்பேரரசு வைரமுத்து
(கவிதை புத்தகம் : ” தமிழுக்கு நிறம் உண்டு” )
-----------------------------------------------------------------------------------------------------

கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அவ்வப்போது படித்து பக்குவப்பட வேண்டியிருக்கிறது. தன்னம்பிக்கை நிலை நிறுத்த உதவும் மந்திர கவிதை இது.
அதிலும், இந்த கவிதையின் இறுதியில் அவர் எழுதியது கவனிக்கபட தக்கது.


அப்படி இருந்தால் அதுவும் தப்பு ,
இப்படி இருந்தால்
இதுவும் தப்பு .

கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து
தானே குரைக்கும் .

உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை
இறுக்கி மூடிடு !

உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை
மூடுதல் சுலபம்...

//// சரிதான்....புதிய முயற்சிகளில் ஈடுப்படும் போது உலகத்திலுள்ள சில சிறிய புத்தியுள்ளவர்களின் இச்சை குணமுள்ள சொற்களை கண்டும் காணாமல் செவிகளை மூடிக்கொண்டு இருப்பது சாலச்சிறந்தது.

நாள் : 4-Mar-15, 5:36 am

மேலே