கவிதை என்பது... புன்னகை பூக்கும் தருணமொன்று கண்களின் ஓரத்தில்...
கவிதை என்பது...
புன்னகை பூக்கும் தருணமொன்று கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகளையும் சேர்த்துக் கொடுப்பின் அந்தக் காட்சி , அந்த நொடியில் ஓர் கவிதையாக மாறி விடுகிறது...
ஜன்னல் ஓரத்தில் குளிர் தென்றலுக்கென்று காத்திருந்த நாளொன்றில் , எனக்குக் கை அசைத்து சென்ற குழந்தையின் உள்ளங்கையில் எழுதப் பட்டிருந்தது , ஒரு கவிதை...
கவிதைக்கென்றே காத்திருந்த நொடிகள் பல காற்றோடு கரைந்து போக , எத்திசையில் இருந்து எனைத் தீண்டிச் சென்றதோ அந்தத் தென்றல் , என்னிடம் இரண்டு கவிதைகளைக் கொடுத்துச் சென்றது எனக்கும் தெரியாமல்...
மழைக் கவிதைக்கென்று காத்திருந்த இரவில் , மழை என் ஜன்னல் நனைத்துக் கொண்டிருந்தது...
"பிரபஞ்சப் பெருவெளி"யின் அதிசயங்களையும் , "விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை அணுகுமுறை"களையும் அறிந்து இருக்காத என் போன்ற சர்வ சாதாரணமான ஒரு பெண்ணுக்குக் கவிதை என்றால் என்ன....
ஒரு கவிதைக்கென்று மூன்று இரவுகள் தொடர்ந்து தூங்காமல் விழித்திருந்தது உண்டு நான்... மூன்றாவது இரவில் அந்தக் கவிதை முழுமை அடைந்தது... அதன் பிறகு எனக்குத் தோன்றியது , உண்மையில் அங்கு நான் தேடியது அந்தக் கவிதையையா இல்லை , அந்த இரவுகளையா...
எனில் , கவிதை என்பது தேடல் நிமித்தமா...
பறவைகளின் குரலில் , கவிதை ஒன்று உருவானது ஒரு முறை...
பறவைகளின் குரலில் கவிதைக்காகக் காத்திருந்து களைத்துப் போன நாளொன்றின் நடு நிசியில் , மின்விசிறியின் மெல்லிய சப்தத்தில் என் அடுத்த கவிதை உருவானது...
எனில் கவிதை என்பது என் உணர்வுகளின் வெளிப்பாடா....
கவிதை என்பது புன்னகை கண்ணீர் வலி போல் என் இன்னொரு உணர்வே ... என்று நான் முடிவு செய்திருந்த நாளொன்றில் என் அறையின் சுவரில் நான் வானத்தையும் நட்சத்திரத்தையும் காண முடிந்த தருணம் உருவான போது , கவிதை என்பது கற்பனைகளின் வடிவமே என்று தோன்றியது எனக்கு...
இன்னொரு பார்வையில் , கவிதைகள் என்பது உணர்வுகளின் வெளிப்பாடே எனில் , நேரில் கண்டோ அல்லது கேட்டோ அல்லது பார்த்தோ அல்லது உணர்ந்தோ இல்லாத ஒன்று கவிதையென்று உருவாகாதா....
ஒரு கவிஞன் என்பவன் சமூகத்தின் கண்ணாடி எனில் , அவன் முன் நிற்கும் கண்ணாடியில் தெரிவது அந்தக் கவிஞனைச் சார்ந்த சமூகத்தின் பிம்பமா அல்லது அவனைச் சுற்றி இருக்கும் சமூகத்தைச் சார்ந்து இருக்கும் அந்தக் கவிஞனின் பிம்பமா...
எனில் கவிதை என்பது சமூகமா...
ஆக , 'ஒரு கவிதை என்பது யாது'......
அகன் ஐயா அவர்களின் கவிதை ஒன்றில் தோழர் ராம் வசந்த் அவர்கள் எழுதி இருந்த கருத்து ஒன்றினைக் கண்ட போது உருவான எண்ணமே இது...
```````````````````````````````````````````````````````````````````````
சார் .. இது கவிதை ....
கூடவே விண்ணப்பம் ....கவிதை எழுதுவது எப்படி ? தொடர் ஆரம்பிக்க வேண்டுகிறேன் ....முதல் மூன்று பகுதிகள் நீங்கள் , பின் ஒவ்வொருவாராய் ..
அடுத்த விண்ணப்பம் ... அது கொஞ்சம் organsied ஆகா இருக்க வேண்டும் ..அந்த சமயத்தில் வேறு தொடர்கள் இல்லமால் இருத்தல் நலம் ...
மொத்தம் 15 பகுதிகள் மட்டும் ... மூன்று நாளைக்கு ஒரு முறை ஒரு பகுதி ..மொத்தம் 45 நாட்கள் .
பரிசீலியுங்கள் ...
உங்கள் அன்பு ராம் ..
```````````````````````````````````````````````````````````````````````
என்னைப் போல் பலர் , எங்கள் முன்பு எண்ணற்ற பாதைகள்.. எங்களின் சரியான பாதை எதுவென்று எங்களுக்கு வழிகாட்ட ,
'கவிதை எழுதுவது எப்படி'
இப்படி ஒரு தொடர் , தளத்தின் ஆகச் சிறந்த கவிஞர்களாலும் சான்றோர்களாலும் உருவாக்கப்பட்டால் , உங்கள் தடங்களைப் பின்பற்றி நடந்து வரும் எங்கள் பாதைகள் அழகாக்கப்படும் ...
வெறும் பாறைகள் சிற்பங்களாக்கப்படும்...
பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைக்கப்படப்போகும் ஒரு வழிகாட்டுதல் தொடருக்காகக் காத்திருக்கிறோம் நாங்கள்...
'கவிதை எழுதுவது எப்படி'..............
- கிருத்திகா தாஸ்...