ஒரு பிரமச்சாரியின் டைரி இளவேனிற் காலத்து வெதுவெதுப்பு போல்...
ஒரு பிரமச்சாரியின் டைரி
இளவேனிற் காலத்து வெதுவெதுப்பு போல்
ஒரு சதுப்பு நிலக்காடு
என் காய ரகசிய அறைகளை
ஆராய்ச்சி பண்ணும்போது
நான் மங்கள்யான் இல்லாமல்
மற்றொரு கிரகத்தில் பயணிக்கிறேன்.
விளைந்த நல் செம்பருத்திக் கூட்டம் ஒன்று
என்னை அழுத்துகிறது....
என்னுடையதான வானம் உடைந்து
ஏகப்பட்ட கடல் மைல்களுக்கு
அப்பால் போய் விழுகிறேன் . ..
விவரங்கள் மூர்ச்சித்து மரணித்து
வெட்கங்கள் நிர்வாணப் பட
ஒரு சமுத்திரக்கரையில் ஒதுங்குகிறேன்.....
மேலிருந்து சில நீர்த்துளிகள்...
மழையென்று நினைத்தது தவறாகிப் போனது .....
என் முக வானத்தில் மேலே
ஒரு பௌர்ணமி நிலவு
சிரிப்பு மழைகளை சிந்திவிட்டுச் சென்றது...
நான் மீண்டும் சிறைப் பிடிக்கப் பட்டேன் .....
அது திரும்பி வர முடியாத
அந்தமான் சிறையாக இருந்தது....
அப்போதைக்கு
அத்தர் மணம் வீசிய அந்த சிறை
அதுவரை பார்க்காத அந்த -மான் சிறை.
காகங்கள் கொத்தவும்
மேகங்கள் உறுமவும்
நாகங்கள் கரையவும்
தாகங்கள் போகவும்
சிலந்தி வலைப் பின்னல்களில்
சின்னாபின்னமாகியது
நானிருந்த அந்த அறை .
சுசீந்திரன்.