எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! இழந்தது எல்லாம்...

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா! 
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் 
இழந்தது எவை என இறைவன் கேட்டான்! 
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்? 
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் 
கோலம் மாறி  அழகையும் இழந்தேன் 
காதலித்து அவளிடம் இதயம் இழந்தேன் 
காணாமல் போனாளே அவளை இழந்தேன் 
வயதாக ஆக ஆக உடல் நலம் இழந்தேன் 

எதை என்று சொல்வேன் நான் 
இறைவன் கேட்கையில்? 
எதையெல்லாம் இழந்தேனோ 
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். 
அழகாகச் சிரித்தான் இறைவன்
”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்" 
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல 
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான். 
திகைத்தேன்! 
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன் 
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன் 
இறைவன் மறைந்தான்.


- படித்ததில் பிடித்தவை

நாள் : 3-Feb-16, 9:37 pm

மேலே