எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மவுனத்தின் புன்னகை 8: மன்னிப்பு அசோகமித்திரன் மனிதர் அனைவரின்...

மவுனத்தின் புன்னகை 8: மன்னிப்பு

அசோகமித்திரன்

மனிதர் அனைவரின் அறிவும் மூன்று விதமாக வளர்கிறது என்கிறார்கள். முதலில், நேரடி அனுபவம்; இரண்டாவது, அனுமானம் அல்லது ஊகித்து அறிதல். மூன்றாவது, நம்பிக்கைக்குரியவர் சொன்னது. எனக்குப் பல எழுத்தாளர்கள் பற்றிச் சொன்னவர் அற்பாயுளில் போய்விட்டார். உண்மையில் என்னைத் தீவிரத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். அவரும் தவறு செய்யக்கூடியவர் என்று நினைக்க வருத்தமாக இருக்கிறது.தவறு நடந்துவிட்டால் மன்னிப்புக் கோருவதுதான் முறை. சிறுவயது முதலே நான் தவறை ஒப்புக்கொள்ளத் தயங்கியது இல்லை. சிலர் வேதாந்தம் பேசலாம், ‘யார்தான் தவறு செய்யவில்லை’ என்று. முன்னாள் அமெரிக்க ஜனாபதி கிளிண்டன் நினைவு எனக்கு வருகிறது. அவர் ஒரு விஷயத்துக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டவர்.நான் எழுத்தாளர் அகிலனுடன் பல கருத்தரங்கங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த நாளில் நேரில் போய் நலம் விசாரித்து வந்திருக்கிறேன். அவர் தலைமை தாங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளனாக இருந்திருக்கிறேன். அவர் காலமான செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் இல்லத்துக்குச் சென்று என் இறுதி மரியாதையைச் செலுத்தியிருக்கிறேன். அகிலன் விருது பெற்ற சம்பவத்தை இந்தத் தொடரின் ஆரம்ப கட்டுரைகளில் எழுதும்போது நேர்ந்த தகவல் பிழைக்கு வருந்துகிறேன்.ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சன் அபிப்பிராயங்களை வாரிக் கொட்டுவார். அன்று அவர் ஆகிருதிக்கு அவரை யாரும் மன்னிப்புக் கேட்க வைத்தது இல்லை. ஆனால், அவருடன் ஓர் ஊழியன் போல இருந்த பாஸ்வெல் திடீரென்று கோபித்துக்கொண்டு போய்விட்டார். முதலில் ஜான்சனுக்குப் புரியவில்லை.அப்புறம் அவரே பாஸ்வெல்லைப் போய்ப் பார்த்தபோது பாஸ்வெல் இப்படி சொன்னாராம்: “தனியே இருக்கும்போது என்னைத் திட்டுங்கள். கிண்டல் செய்யுங்கள். நான் ஸ்காட்லண்ட்காரன் என்று கேலி செய்யுங்கள். இதெல்லாம் மண்தரையில் தள்ளுவதைப் போல. ஆனால், பிறர் இருக்கும்போது நீங்கள் இப்படிப் பேசினால் என்னைக் கூழாங்கற்கள் மீது தள்ளுவது போலிருக்கிறது.”பாஸ்வெல்லின் வாழ்க்கை லட்சியமே ஜான்சன் சொன்னதை எல்லாம் உடனுக்குடன் குறிப்பு எடுப்பதுதான். அப்படிப்பட்டவர் மனம் நொந்து போய்விடும்போது, அதைக் கண்டு ஜான்சன் வருந்தி மன்னிப்பு கேட்டுவிடுவாராம்.நான் படித்த பள்ளிக்கூடம் சோமசுந்தர முதலியார் என்பவரால் நிறுவப்பட்டது. பிரின்சிபால் மட்டும் முதலியார். மற்ற ஆசிரியர்கள் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒன்பதாவது வகுப்புக்கு என்.ஆர்.கே.எல். நரசிம்மன் என்ற பெயர் கொண்டவர் ஆசிரியராக வந்தார். அவரை நாங்கள் ‘பெங்கால் டைகர்’ என்று அழைப்போம். எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. வகுப்பு ஆசிரியர்தான் ஆங்கில வகுப்பு எடுக்க வேண்டும் என்பது அந்தப் பள்ளியின் மரபு.என்.ஆர்.கே.எல் ஆங்கிலத்தைப் புது மாதிரியாகக் கற்றுக் கொடுத்தார். எந்தக் கேள்விக்கும் அதன் பதிலுக்கும் முதலில் மனதில் தமிழில் வடிவம் கொடுத்துக் கொண்ட பின் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பார். நான் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன். ஆங்கிலத்தில் பிழைகள் குறைவாகவே நேர்ந்தன. நான் அவரை நினைத்துக் கொள்ளாத நாளே கிடையாது.அப்படிப்பட்ட அவர் ஒருமுறை என்னை நையப் புடைத்துவிட்டார். அந்த நாளில் ஆசிரியர்கள் அடிப்பது சர்வ சாதாரணம். சில நேரங்களில் தண்டனைக்குப் பிரின்சிபால் அறைக்கு அனுப்புவார்கள். அவர் அறையில் ஒரு மூலையில் மூன்று நான்கு பிரம்புகள் இருக்கும். மாணவன் கையை நீட்டவேண்டும். பிரின்சிபால் மூன்று முறை அல்லது நான்கு முறை அடிப்பார். ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் மாணவர்களை அடிப்பதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் அன்று பெங்கால் டைகர் என்னைக் கன்னத்தில் அடித்திருந்தார். ஒரு பக்கம் வீங்கிவிட்டது. அம்மாவின் வற்புறுத்தலில் அப்பா ஒரு புகார் கடிதம் எழுதினார். எனக்கு அதைக் கொடுக்கவே மனசில்லை. மாலையில் எல்லா வகுப்புகளும் முடிந்த பிறகு பெங்கால் டைகரிடம் கொடுத்தேன். “ஏண்டா, இதெல்லாம் போய் வீட்டில் சொல்வார்களா?” என்று கேட்டார். “நான் சொல்லவில்லை சார். ஆனால், கன்னம் கொஞ்சம் வீங்கியிருந்தது.” என்றேன்“நான் பதில் எழுதணுமா?”“வேண்டாம் சார். நான் அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன்” என்றேன்.தெலுங்குநரசிம்ம ராவ் என்று ஓர் ஆசிரியர் எனக்கு ஓராண்டு வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவருக்கும் பல தருணங்களில் அடிக்கத் தோன்றும். ஆனால், அவர் அடித்தால் அவருக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும். அவர் பன்ஸிலால்பெட் என்ற இடத்தில் ஒரு சிறு வீட்டை இன்னொரு ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். நான் பல முறை நோட்டு புத்தகக் கட்டுகளை அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். அவர் வீட்டுக்குச் சென்றால் பரிதாப உணர்ச்சியே தோன்றும். அவரோடு அந்த வீட்டைப் பகிர்ந்துகொண்ட இன்னொரு ஆசிரியர் அடுப்படியில் சமையல் செய்துகொண்டிருப்பார்.அந்த நாளில் சமையல் செய்ய விறகுதான். அடுப்பை மூட்டுவது எப்படி? காகிதத்தை சுருட்டி கொளுத்தி விறகைப் பற்ற வைக்க வேண்டும். நரசிம்ம ராவ் ஒருமுறை அவர் திருத்தி மதிப்பெண் தரவேண்டிய விடைத்தாள்களில் சிலவற்றை அடுப்புப் பற்றவைக்க எடுத்துக் கொண்டுவிட்டார். அப்படி அக்னிப்பிரவேசம் செய்த விடைத்தாள்களில் என்னுடையதும் ஒன்று. நான் சிறு பையன். 13 வயதிருக்கும். என்னிடம் தனியாக “என்னை மன்னித்துவிடு. வீட்டில் மூன்று நான்கு விடைத்தாள்கள் தொலைந்துவிட்டன. கவலைப்படாதே உனக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் மார்க் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.அந்த நாளில் 60 மதிப்பெண்கள் வாங்கினால் ஃப்ர்ஸ்ட் கிளாஸ். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் அடி வாங்கினால்தான் என்ன என்று தோன்றும்.நான் ஐந்திலிருந்து ஆறாம் வகுப்புக்குப் போயிருந்தேன். விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்த நாளில் நான் பள்ளிக்குப் போகவில்லை. அந்த நாளில் முதல் நாளில் வகுப்புக்கு வராத மாணவர்களை விலக்கிவிடுவார்கள். அந்த வகுப்பு வாத்தியார் வடிவேலு என்பவர். என் அப்பா போட்டுக்கொள்வது போல ஒரு தொப்பி போட்டுக் கொள்வார்.அடுத்த நாள் அவர் என்னை பள்ளி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, நான் கட்ட வேண்டிய அபராதம், மாதச் சம்பளம் எல்லாம் சேர்த்து ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார். நான் வீட்டுக்கு ஓடினேன். அங்கிருந்து என் அப்பா அலுவலகத்துக்குச் சென்று “நான் இவ்வளவு பணம் கட்டினால்தான் சேர்த்துக்கொள்வார்களாம்” என்றேன். எல்லாம் 10 ரூபாய்க்குள்தான். அந்தப் பணம் அப்பாவிடம் இல்லை. அவருடைய அதிகாரியிடம் கடன் வாங்கிக் கொடுத்தார். நான் மறுபடியும் பள்ளிக்கு ஓடினேன். வடிவேலு வாத்தியார் சாப்பிடக் கூடப் போகாமல் எனக்காகக் காத்திருந்தார். அந்தப் பணத்தை அலுவலகத்தில் கட்டி, என் பெயரை ஆஜர் பட்டியலில் சேர்த்த பிறகுதான் சாப்பிடப் போனார்.வடிவேலு வாத்தியாரும் அடிப்பார். ரொம்பக் கடுமையான தண்டனை முழங்காலில் நிற்க வைப்பது. அவருடைய வகுப்பில் எப்போதும் இரண்டு மாணவர்களாவது முழங்காலில் நின்று கொண்டிருப்பார்கள்.“என்ன காட்டுமிராண்டித்தனம்?’’ என்று இன்று கேட்கலாம். ஆனால், நான் பள்ளியில் படித்த ஆறு ஆண்டுகளில் எனக்கு வகுப்பு எடுத்த எந்த ஆசிரியரையும் மறக்க முடியவில்லை. ஒருவர் மீதும் கோபம் வரவில்லை.“நீங்கள் அப்படி முதுகெலும்பு இல்லாமல் இருந்தால் எல்லாரும் அப்படியிருக்க வேண்டுமா?” என்று சிலர் கேட்கக் கூடும். இது வெறும் முதுகு சம்பந்தப்பட்டது அல்ல. என் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் நிழலாகத்தான் நினைவில் இருக்கிறார்கள். ஆனால், என் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள்.- புன்னகை படரும்…

நாள் : 20-Feb-16, 1:25 am

மேலே