படித்ததில் பிடித்தது மனைவிக்கு தண்ணீர் மறுப்பு: தனியாக கிணறு...
படித்ததில் பிடித்தது
மனைவிக்கு தண்ணீர் மறுப்பு: தனியாக கிணறு வெட்டி ஊருக்கே வழங்கும் தனி ஒருவன்!

மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டம், கோலம்பேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுராவ் தஜ்னே. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், கூலித்தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவரது மனைவி ஊரில் இருந்த உயர் வகுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது கிணற்றின் உரிமையாளர், தண்ணீர் எடுக்க கூடாது என கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அவர் அழுது கொண்டே வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி அழுவதை பார்த்து விரக்தி அடைந்த பாபுராவ், தனது வீட்டிற்கு அருகில் தனியாக கிணறு வெட்ட ஆரம்பித்திருக்கிறார்.
பாபுராவ் வெட்டிய கிணற்றுக்கு அருகில் ஏற்கனவே 3 கிணறுகளும், ஒரு ஆழ்துளை கிணறும் தண்ணீர் இன்றி வறண்டு கிடந்திருக்கிறது. இதனால், பாபுராவை அவரது மனைவி உள்பட உறவினர்கள் அனைவருமே விமர்சனம் செய்ததோடு, யாரும் கிணறு வெட்ட உதவியும் செய்யவில்லை.

இப்போது அந்த கிணற்றில் இருந்து தாழ்த்தப்பட்டவர் மட்டுமின்றி, உயர் சாதியினரும் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து பாபுராவ் கூறுகையில், ''எங்களுக்கு தண்ணீர் தர மறுத்த உரிமையாளர் பெயரை கூற விரும்பவில்லை. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் தண்ணீர் மறுக்கப்பட்டது. இதனால், எப்படியாவது தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடவுளை மட்டுமே நினைத்து வேண்டிவிட்டு, பக்கத்து ஊருக்கு சென்று கிணறு வெட்டும் பொருட்களை வாங்கி வந்தேன்.
எனது வேண்டுதலின் பயனாக கடவுள் இந்த இடத்தில் தண்ணீர் வர வைத்து இருக்கிறார். இப்போது தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, உயர் சாதியினரும், எங்களுக்கு தண்ணீர் தர மறுத்தவர்களும் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர்'' என்றார்.

தனி ஒருவனாக நின்று 40 நாட்களாக கடுமையான உழைப்பின் மூலம் கிணறு வெட்டி, இன்று ஊருக்கு தண்ணீர் வழங்கும் பாபுராவ் தஜ்னேவை பார்த்து ஊரார் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்