எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மானிடம் போற்றும் மக்கள் திலகம் கலைஞரும், எம்.ஜி.ஆரும் நண்பர்கள்...

மானிடம் போற்றும் மக்கள் திலகம்

கலைஞரும், எம்.ஜி.ஆரும் நண்பர்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அரசியலில் எதிரிகளாக இருந்தாலும், அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. இந்த இடுகை கொஞ்சம் பழசு என்றாலும் எல்லோருக்கும் சமர்ப்பிப்பது சிறந்தது என்று தோன்றியதால் இடுகிறேன்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி முதல்வர் பதவியில் என்னை உட்கார வைத்தவர் எம்.ஜி.ஆர் தான் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். கருணாநிதி முதல்வர் பதவிக்கு வந்து 18 ஆண்டுகள் முடிந்து 19வது தொடங்குவதையொட்டி சட்டசபையில், முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய முதல்வர் கருணாநிதி,’இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் காமராஜரை நான் சாடாத கூட்டங்கள் இல்லை. எழுதாத கட்டுரைகள் இல்லை. ஆனால், அவர் பெருந்தலைவர் என்பதற்கேற்ப, எப்படி நடந்து கொண்டார் என்பதை அவருடைய வரலாறு விளக்கும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலேயே அதைக் காணலாம். அண்ணாவால் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தப்பட்டபோது, அந்த மாநாட்டினுடைய முதல் விழாவைத் தொடங்கி வைக்க வந்தவரே பெருந்தலைவர் காமராஜர்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்தபோது, அவருக்கும், எனக்கும் எத்தனையோ பூசல்கள், எத்தனையோ கடுமையான வாக்குவாதங்கள் இந்த அவையிலேயே நடந்ததுண்டு. நான் சாட்டிய குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் இவற்றுக்கெல்லாம் அவர் வேகமாக அளித்த பதில்கள் எல்லாம் இன்றைக்கும் எனக்கு நினைவிலே இருக்கின்றன. அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார். நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை. இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது. திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது. என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட அரசியல் பண்பாட்டையும், தமிழ் பண்பாட்டையும் காப்பாற்றும் வகையில் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் அதற்கு என்றும் நான் கடமைப்பட்டவனாக இருப்பேன் என்று கூறிக் கொள்கிறேன்’ என்றார்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 16-Sep-17, 3:25 pm

மேலே