கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத...
கல்வி, தொழில் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவியை வணங்குவதன் மூலம் கல்விச்செல்வம் பெருகும். குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்யவிருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும். படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும். அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின், அருள் பார்வையில் படும்படியாக புத்தகங்களை வைத்து முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்ட நைவேத்தியங்களை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும்.
செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்கள். இவற்றை மாலையாகத் தொடுத்து கல்வியின் அதிபதிக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். அனைத்துக்கும் ஸ்ரீவிநாயகரே முழுமையானவர். முதலானவர். மூலப் பரம்பொருள். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது 'துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம' என்று கூறி பூஜையை தொடங்குவது நன்மைகளை வாரிவழங்கும்! பூஜையில் கலசம் வைத்தும் கலைமகளை வழிபடலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே போதுமானது. அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கப் பெறலாம்!
ஆயுத பூஜை வழிபாடு
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை. ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.