திருநங்கை ஆண் தேவதைகளாக சபிக்கப்பட்ட பெண் பாவம் நாங்கள்.....
திருநங்கை
ஆண் தேவதைகளாக
சபிக்கப்பட்ட பெண் பாவம் நாங்கள்..
மலர்களே பூக்காத செடிகள் நாங்கள்;
வண்டுகள் அருந்த மறுக்கின்ற
பூக்கள் நாங்கள்;
கருப்பை இல்லாமல் தாய்மை
உணர்வு கொண்டுள்ளோம்!
உணர்வுகளை புதைத்து கொண்டு
உரிமைகளுக்காக போராடுகிறோம்;
பொய்மை வேடம் அணிந்து
உண்மையை யாசிக்கின்றோம்;
கனவுகளை நனவாக்க,
கற்பையும் இழக்கின்றோம்;
இயற்கையின் வர்ணனை நாங்கள்
என்று நினைத்தோம் - ஆனால்
இயற்கையின் முரண்பாடு என்று
சமுதாயம் பெயர் சூட்டியது !
அமைதி கொண்டு எழ
நினைத்த எங்களுக்கு,
அவமானம் மட்டுமே மிஞ்சியது...
தடுக்கி விழும் போதெல்லாம்
தாங்கி பிடிக்கும் கரங்கள் தேடினோம்;
உணர்வுகள் வதைக்கப்படும் போதெல்லாம்,
தாயின் மடிக்கு ஏங்கினோம்;
மனம் சோர்வுரும் போதெல்லாம்
தந்தையின் அரவணைப்பை தேடினோம்...
சமுதாயம் வெறுக்கும் போதெல்லாம்
சாகத் துணிந்தோம்!
ஆனால், அதையும் தடுத்து - இன்று
நடமாடும் பிணங்கள் ஆக்கி விட்டீர்கள்!
இன்றும் போராடிக்கொண்டு இருக்கிறோம்,
எங்கள் உரிமைகளுக்காக..!
- விசாலாட்சி