எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரம்தின்ற மனிதர்கள் .... இளமையும் இல்லை இலைகளும் இல்லை...

மரம்தின்ற மனிதர்கள் ....

இளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை 
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

மனிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

எத்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.

- பனித்துளிசங்கர்

நாள் : 12-Apr-20, 10:17 pm

மேலே