சந்தோஷம் சந்தோஷம்

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி

விளையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணிப் பண்ணித்

திருந்திய பிறகு தான் நாகரீகம் பிறந்ததடி

தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல

பாடம் படி பவழக்கொடி

உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும்

குப்பைத் தொட்டியில்லை

உள்ளம் என்பது பூந்தொட்டியானால்

நாளை துன்பமில்லை

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

ஆதியிலாண்டவன் இந்த பூமியை படைத்தானே

அவனாசையைப் போலவே இந்த பூமி அமையலையே

ஆண்டவனாசையே இங்கு பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மையென்றும் தீமையென்றும் நாலுபேர்கள் சொல்லுவது

நம்முடைய பிழையில்லையே

துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும்

துணிந்தபின் பயமில்லையே

கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டு கொள்

காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு

எந்தத் தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு

சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:14 pm)
பார்வை : 0


மேலே