முல்லாவின் கதை= 02

முல்லா பெரிய அறிவாளி. அவருக்கு எப்படி ஆபத்தோ துன்பங்களோ வந்தாலும் அதற்காகக் கவலைப்படாமல், பயப்படாமல், தனது அறிவாற்றலால் தப்பிவிடுவார். ஊர் எல்லாம் முல்லாவின் ஞானத்தையே பெருமையாகப் பேசியது. அது அந்த நாட்டு மன்னரின் காதுக்கும் எட்டியது.

அவருடைய அறிவாற்றலைப் சோதிக்க விரும்பிய மன்னர் ஒருநாள், முல்லாவை அரசவைக்கு வரவழைத்தார். முல்லாவும் வந்தார். மன்னரை வணங்கியபடி நின்றார்.

''முல்லா, உமது அறிவைப்பற்றி ஊரெல்லாம் மெச்சுகிறார்கள். நீ உண்மையிலேயே அறிவாளியா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். அதனால், உமக்கு ஒரு பரிசோதனை வைக்கப்போகிறேன். நீ ஏதேனும் ஒன்றை இப்போது இந்தச் சபையில் கூற வேண்டும். நீ சொன்னது உண்மையாக இருந்தால் உன்னுடைய தலை வெட்டப்படும். நீ சொன்னது பொய்யாக இருந்தால் நீ தூக்கிலிடப்படுவாய்'' என்றார் மன்னர்.

மன்னர் இப்படிச் சொன்னதும் முல்லா அதிர்ந்தார். மன்னர் எப்படியும் நம்மை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். நாம் உண்மையைச் சொன்னாலும், பொய்யைச் சொன்னாலும் நமக்கு ஆபத்து தயாராக இருக்கிறது.

இதை மிகவும் சாமர்த்தியமாகவே சமாளிக்க வேண்டும் என்று முல்லா தீர்மானித்தார். முல்லா தீவிரமாக யோசித்தபடி இருந்தார். முல்லா இப்போது என்ன சொல்லப்போகிறார் என்பதைச் சபையினரும், மன்னரும் உன்னிப்பாக எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.

முல்லா மன்னரிடம், ''மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில்தான் போடப் போகிறீர்கள்'' என்றார்.

முல்லா அப்படிச் சொன்னதும், மன்னர் திகைப்படைந்தார். முல்லா சொன்னது உண்மையானால், அவருடைய தலை வெட்டப்பட வேண்டும். தலை வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், முல்லாவைத் தூக்கில்போட வேண்டும். தூக்கில்போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்ட வேண்டும்.

இப்படி ஒரு குழப்பத்தைத் தம்முடைய அறிவாற்றலால் தோற்றுவித்து, மன்னரை முல்லா திக்குமுக்காட வைத்துவிட்டார். மன்னரால் எதுவும் தீர்ப்புகூற முடியவில்லை.

சாதுர்யமாகப் பேசி, தனக்கு வந்த ஆபத்தைத் தன்னுடைய அறிவாற்றலால் சமாளித்த முல்லாவைப் பாராட்டி, பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் மன்னர்!

(வை.கோபாலகிருஷ்ணனின் வலைப்பதிவில் இருந்து. - என் விகடன்: திருச்சி)

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (16-May-13, 9:09 pm)
பார்வை : 660

சிறந்த நகைச்சுவைகள்

மேலே