புறநானூறு பாடல் 14 - சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்

இப்பாடலை எழுதியவர் கபிலர் என்னும் சான்றோர் ஆவார். ஒரு சமயம் கபிலரும், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனும் ஒன்றாயிருந்த நேரத்தில், இவ்வேந்தன் கபிலரின் கையைப்பற்றி ‘உமது கை மிக மென்மையாக உள்ளதே! என வியந்து கூறினான். அது கேட்ட கபிலர் அவன் கூற்றையே கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலை இயற்றினார்.

இப்பாட்டில், ‘அரசே, யானை மேல் அமர்ந்து வரும்போது அதன் அங்குசமும், குதிரையைச் செலுத்தும் போது அதன் கடிவாளத்தைப் பிடிப்பதாலும், தேரின் மேலிருந்து வில்லேந்தி அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அருங்கலம் வழங்கவும் பயன்படுவதாலும் உன் கைகள் வன்மையாக உள்ளன. என் போன்ற பரிசிலர் உடலால் உழைப்பின்றி, பிறர் நல்கிப் பெறும் சோறுண்டு இருப்பது தவிர வேறு தொழில் இல்லை; ஆதலால் என் கை மென்மையாக உள்ளது என்று கூறுகின்றார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
பாருடைத்த குண்டகழி 5

நீரழுவ நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் 10

வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவுநாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் 15

மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே.

பதவுரை:

கடுங்கண்ண கொல்களிற்றால் – கடுமையான பார்வையுள்ள கண்களையும், கொல்லும் தன்மையையும் உடைய யானையினால்

காப்புடைய எழு முருக்கி – பகைவரின் காவல் மரமாகிய கணைய மரத்தை உடைத்து

பொன் இயல் புனை தோட்டியான் – இரும்பால் செய்து அழகுற அமைக்கப்பட்ட அங்குசத்தால்

முன்பு துரந்து சமம் தாங்கவும் – முன்னிலையாய்ச் செல்லும்படி செலுத்தி, நிதானித்து இழுத்து நிறுத்தவும்,

பாருடைத்த குண்டகழி – கடினமான நிலத்தை குந்தாலியால் தோண்டிச் செய்த குழிந்த அகழியின்

(குந்தாலி - Pick-axe with one prong, குத்தித்தோண்டுங் கருவி)

நீரழுவ நிவப்புக் குறித்து – நீர்ப்பரப்பின் அகலமும், ஆழத்தின் அளவும் கருதி

நிமிர் பரிய மா தாங்கவும் – மிகுந்த திறனுடைய குதிரையின் கடிவாளம் பிடித்து வேண்டுமளவு நடத்தவும் செய்கின்றவன் நீ!

ஆவம் சேர்ந்த புறத்தை – அம்பறாத்தூணியை முதுகில் பொருத்தி

தேர்மிசை – தேர்மேலே நின்று

சாவ நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் – உனது வில்லின் வலிய நாணைப் பிடித்துப் பிடித்து உன் கைகள் காய்த்துப்போகும்படி அம்பைச் செலுத்துவதாலும்

பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் – எம் போன்ற பரிசு பெறுவோர்க்கு அணிகலன்களை அளிப்பதாலும்

குரிசில் - அரசே

வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை – கடினமாக இருக்கும் முழங்காலைத் தொடுமளவு நீண்ட உனது பெரிய கைகள்.

புலவு நாற்றத்த பைந்தடி – புலால் மணத்தை உடைய புதிய ஊண்கறியை

பூ நாற்றத்த புகைகொளீஇ – இனிய பூ மணமுடைய புகையால் கொளுத்தி தாளிதத்துடன் கூடிய

ஊன் துவை கறி சோறுண்டு – ஊனும் துவையலும் கலந்த அசைவமும் சோறும் சாப்பிட்டு

வருந்து தொழில் அல்லது – உடலை வருத்தும் செயல் அல்லாது

பிறிது தொழில் அறியா ஆகலின் – வேறு எந்த உடல் உழைப்புக்கான செயலும் செய்யத் தெரியாதாகலின்

தாமே நன்றும் மெல்லிய பெரும – தான் மிகவும் மெல்லியனவாக உள்ளன, பெருமானே!

நல்லவர்க்கு ஆரணங்கு ஆகிய மார்பின் – பெண்டிர்கள் விரும்பி வேட்கைத் துன்பம் பயக்கின்ற அழகிய அகன்ற மார்பினையும்

பொருநர்க்கு இரு நிலத்தன்ன நோன்மை – உன்னை எதிர்த்துப் போரிடுவார்க்கு, இறுகிய நிலத்தைப் போன்ற வலிமையுமுடைய

செரு மிகு சேய் – போரில் சிறந்த முருகக் கடவுளைப் போனற ஆற்றலுடையவன்,

நிற் பாடுநர் கையே – உன்னைப் பாடுவோருடைய கைகள்.

பொருளுரை:

பெண்டிர்கள் விரும்பி வேட்கைத் துன்பம் பயக்கின்ற அழகிய அகன்ற மார்பினையும், உன்னை எதிர்த்துப் போரிடுவார்க்கு, இறுகிய நிலத்தைப் போன்ற வலிமையுமுடைய போரில் சிறந்த முருகக் கடவுளைப் போனற ஆற்றலுடையவனே! அரசே!

கடுமையான பார்வையுள்ள கண்களையும், கொல்லும் தன்மையையும் உடைய யானையினால் பகைவரின் காவல் மரமாகிய கணைய மரத்தை உடைத்து, இரும்பால் செய்து அழகுற அமைக்கப்பட்ட அங்குசத்தால் முன்னிலையாய்ச் செல்லும்படி செலுத்தி, நிதானித்து இழுத்து நிறுத்தவும், கடினமான நிலத்தை குந்தாலியால் தோண்டிச் செய்த குழிந்த அகழியின் நீர்ப்பரப்பின் அகலமும், ஆழத்தின் அளவும் கருதிமிகுந்த திறனுடைய குதிரையின் கடிவாளம் பிடித்து வேண்டுமளவு நடத்தவும் செய்கின்றவன் நீ!

அம்பறாத்தூணியை முதுகில் பொருத்தி தேர் மேலே நின்று உனது வில்லின் வலிய நாணைப் பிடித்துப் பிடித்து உன் கைகள் காய்த்துப்போகும்படி அம்பைச் செலுத்துவதாலும், எம் போன்ற பரிசு பெறுவோர்க்கு அணிகலன்களை அளிப்பதாலும் முழங்காலைத் தொடுமளவு நீண்ட உனது பெரிய கைகள் கடினமாக இருக்கும், அரசே!

புலால் மணத்தை உடைய புதிய ஊண்கறியை இனிய பூ மணமுடைய புகையால் கொளுத்தி தாளிதத்துடன் கூடிய ஊனும் துவையலும் கலந்த அசைவமும் சோறும் சாப்பிட்டு உடலை வருத்தும் செயல் அல்லாது வேறு எந்த உடல் உழைப்புக்கான செயலும் செய்யத் தெரியாதாகலின் தான் உன்னைப் பாடுவோருடைய கைகள் மிகவும் மெல்லியனவாக உள்ளன, பெருமானே!

விளக்கம்:

’மெல்லிய வாமால் நுங் கை’ என்ற சேரமான் வாழியாதனுக்கு, கபிலர் தன் கையின் மென்மைக்குக் காரணம் கூறும்பொழுது ‘என் கை’ என்று கூறாமல் ‘பாடுநர் கை’ என்றது, தன்னைப் படர்க்கையாகக் கூறி, தன்னைப் போன்ற பிற பாடுநர்க்கும் அப்படியே என்கின்றார். நும் கை மெல்லியது என்று வேந்தன் கூறியதால், வேந்தனது கை வன்மையும், கை வண்மையும் ஒருங்கே பாடுவதற்கு வாய்த்தமையால், அதனை விடாது அரசன் கையின் இயல்பும் கூறினார். எனவே இது ’பாடாண் திணை’ ஆயிற்று.

போரில் உயர்ந்த வீரமுள்ள ஒருவனை முருகனென்பது தமிழ்நாட்டு வழ்க்கமாதலின், அவனை முருகனோடு உவமை கூறிச் சிறப்பிப்பது வழ்க்கமாயிற்று. அதனால் கபிலர் சேரமானை ‘செருமிகு சேஎய்’ என்றார். தம் கையின் மென்மையது இயல்பு கூறும் கபிலர், அரசன் கையின் வலிமையின் இயல்பும் கூறியதால், இது இயன்மொழித் துறை ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-13, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 701

மேலே