தேவதைகள் தூங்குகிறார்கள்சிறுகதை- கவிஜி

தேவதைகள் கொல்கிறார்கள் என்றுதான் எழுத நினைத்தேன்... ஒரு மணி நேரத்துக்கு முன்னால்..... ஆனால்.... ஒரு மணி நேரத்துக்கு பின்னால்... தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதி விட்டேன்....மனம் அப்படித்தானே.... அது எழுதிக் கொண்டே அழிக்கவும் செய்யும் மாய வித்தைகளின் எல்லாப் பக்கங்களையும் தன் மாய மைகளினால் நிரப்பிக் கொண்டே செல்லும்.... செல்கிறது.... 'காண்பதெல்லாம்' கனவினைப் போல்... புதைந்தழிந்தே போனதனால் நானும் 'ஆழ் மனமோ' ... என்ற பாரதியையும் உணர்ந்தேன்...சொந்த மனம் தன்னை ஒதுக்குவதை தாங்கி கொள்ளும் சக்தி... ஏனோ... எனக்கு மனம் கூட்டி வந்திருக்கிறது....சொல்லடி சிவசக்தி.. எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்து விட்டாய்... என்பதைக் கொஞ்சம் மாற்றி சுடர் மிகு பலத்துடன் படைத்து விட்டாய்... என்று முணு முணுத்துக் கொண்டேன்...

மனதை கீறி...அதில் நானும் தேவதையே என்று எழுதும் தேவதைகளின் மன தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும்.. என்று ஓங்கி அழும் பேராசைகளின் இரைச்சலின் கூப்பாடுகளாக எனது துளியெல்லாம்... நிறமற்ற ரத்தமானதைப் போல.. உணர்ந்து சிரித்தேன்...சிரித்து.. உணர்ந்தேன்.... அல்லது... இரண்டும் அற்ற இடைவெளியில்... இல்லாமலே உணர்ந்தேன்...சிரித்தேன்....

நான் எதிர் திசையின் எதிர்ப்பதமாகவே எப்போதும் இருப்பதால்... திமிரின் பிள்ளையென... தீண்டியும்... தூண்டியும்... செய்ய முடியாத ஆழத்தில் நீந்தி நீந்தி... நீராவதால்.... கடல் ஒன்றும் பெருங் கனவல்ல என்று கூடி நரைத்து..... கிழம் எய்திய சங்கத் தமிழின் ஒன்றும் அறியா தினமாக மாறும் மனதுக்குள் முண்டியடித்து அமர்ந்து விட்டேன்... நிதானம் இழக்க அவகாசம் தேடும் மனதுக்குள் நான் பெரும் தானங்களின் கவிதையாக கிறுக்கு பிடித்து தலை சிலுப்பிய ஏதோ ஒரு அடுக்கின் கலைதலின் புலம்பல்களாக.. கொஞ்சம் மது தேடித் திரிந்து...மிஞ்சும்.... சதி பின்னித் திரியும்... நீள வான ஓடைக்குள் மூழ்கிடவே விரும்பினேன்..... தேவதைகள் கொல்கிறார்கள் என்று உரக்க சொல்லும்... துணிச்சல் உண்டு என்பதால்.. அணைத்து தள்ளிப் போன காலத்தின் முகமூடிக்குள் தலை சாய்த்துக் கொண்டேன்....

காரணம் இல்லாமல் வெறுக்கும் கலைகளை நல்லவேளை நான் கற்றுக் கொள்ளவே இல்லை..கற்றதையெல்லாம் அன்பின் சுவடுகளாகவே வீசி எறிகிறேன்... சில போது அதன் தீச்சுடரை பந்தமாய் கொளுத்தி விடுகிறேன்.. கொழித்து செழுமையாக பீறிடும்.. முத்தத்தால் மீண்டும் மீண்டும் காதலையே விதைக்கிறேன்... விதைந்த போது... தேவதைகள் தூங்குகிறார்கள் என்று எழுதத் தோன்றியது... ஆம்.. தேவதை தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்...

ரயில் பயணத்தில் எப்போதாவது எப்போதும் மறக்க முடியாத பெண் ஒருத்தி நம்மோடு பயணித்து விடுகிறாள்.... இன்று அப்படி ஒருத்தி என்னோடு பயணித்தாள்... என்னோடு மட்டுமே பயணித்து போல........ பக்கவாட்டு மேல் பெர்த்தில்.. அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்... பெட்ஷீட் கழுத்து வரை போர்த்தி.. முகம் தெரியும் அளவுக்கு இடம் விட்டிருந்தாள்... அல்லது கண்களை மூடிக் கொண்டிருந்தாள், தமிழன்பனின் புதுக் கவிதையென....... பார்த்ததும் பிடித்து விடும் முகம்... பிடித்து விட்ட முகம்... வேர்த்து விறுவிறுத்து.. கனத்து... சிவந்து... கிடந்த மனதுக்குள் அந்த முகம் ஒரு மஞ்சள் நிலவை விதைத்தது.. அரும்பு மீசை போல உள்ள பூனை ரோமத்தில் முயங்கித் திரண்ட வியர்வைத் துளிகளின் சூட்டை ஒரு சில் காற்றின் ஈரத்தோடு என் கண்கள் நனைத்து நின்றன...தூண்டில் கண், ஜப்பான் மூக்கு, தொங்கட்டான் காது, இரண்டடுக்கு ஆரஞ்சு சுளையின் இதழ்கள்... கொண்ட சற்றே பெரிய நெற்றியில் சிறிய பொட்டு கொண்ட... வட்ட முகம்...... ஜப்பான்காரியாவதற்கு முந்தைய நிமிடத்தில் நின்று விட்ட தமிழ் முகம்....

வலது பக்க மேல் பெர்த்தில் நான்... தம்பி தன் இடத்தை எனக்கு விட்டுக் கொடுத்து.... அவன் கீழ் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.... எனக்கு நேராக எதிர் பெர்த்தில் என் நண்பன்.... படுத்ததும் தூங்கி விட்டான்.... அவனுக்கு கீழே ஒரு ஹிந்திக்காரன்..... அவன் பாடல் கேட்பதில் மூழ்கி விட்டான்.... அவனுக்கு கீழே அந்த தேவதையின் மொட்டைத்தலை அப்பா.. தூங்கியே விட்டார்... எனக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியவர்... அவரைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை... தேவதை பெர்த்துக்கு கீழ் இருந்த பெர்த்தில் ஒரு நடுத்தரம்... கண்கள் இறுக மூடியேதான்.. புரண்டு கொண்டிருந்தது.......

தேவதை அவளின் முதல் வார்த்தையை, வாக்கியத்தை... சொற்றொடரை... கவிதையாகவே கூறினாள்... கவிதைக்கு கவிதைதானே வரும் என்று ஒரு சிறுவனைப் போல.. யோசித்தது...கவிதைகளற்ற மனம்...

"அந்த லைட்ட கொஞ்சம் அணைக்க முடியுமா...?"....!!!!!!... நான் கண்களால் அணைத்தேன்...எனது நடுங்கிக் கொண்டிருக்கும் என் மனதுக்குள் அவளின் வார்த்தைகள் தேவையாய் இருந்ததை நான் உணர்ந்த படியே லைட்டை நிஜமாகவே அணைத்தேன்... கதவுப் பக்கமாகவே எங்கள் இருக்கை அமைந்து விட்டதால்.... அங்கு எரிந்து கொண்டிருந்த லைட்டின் வெளிச்சம் அவளுக்கும் எனக்கும்... ஒரு..... ஒரு மெல்லிய கோடாய் ஒளிச் சிதறலை அவள் நிறத்திலேயே படற விட்டுக் கொண்டிருந்தது.. அவள் கண்கள் இப்போது ஆழமாக மூடி இருந்தன.. நான் வலது பக்கம் திரும்பி படுத்து.. தலைக்கு வலக்கையை அணைக் கொடுத்து அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.... ஒரு மயிலிறகாய் அவளின் சாந்த முகம். காந்தம் பரப்பிக் கொண்டிருந்தது...

"இந்த மாதிரி தேவதைகளைக் காதலித்துக் கொண்டே இருக்கலாமோ"- என்று எனது மனம்.. கோபச் செழுமைக்குள் இருந்து.. அன்பின் வரட்சிக்குள்.. மிதக்கத் தொடங்கியது...

நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.. ரயிலின் ஆட்டத்துக்கு அவளின் பூசின உடம்பு குலுங்கிக் கொண்டேயிருந்தது...... ஒரு, சாவி கொடுத்த குழந்தை பொம்மையாக ...எனக்கு காரணமே இல்லாமல் புன்னகை வந்தது.. காரணமே இல்லாமல் கோபம் வந்ததைப் போல... விட்டு தூரம் சென்று ஓடி மறைந்து என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட பொழுதை இந்த ஜப்பான் முகம்... மனதால் ஏந்திக் கொண்டதைப் போலவே உணர்ந்தேன்...... அந்த முகத்தில் அத்து மீறி நுழைந்த என் பார்வையை ஏதோ ஒரு பெண் மனத் தவிப்பின் உட்புறம் புரிந்து கொண்ட புள்ளியில் சட்டென்று கண் விழித்தாள்... விழிக்கும் போதே அந்த பார்வையின் நீட்சி சரியாக என் கண்களை நோக்கியே சரிந்தது.. அவள் கண்கள் என் கண்களில் படரும் நொடியில்.. தொடர்ச்சியாக நான் சட்டென என் கண்களை மூடிக் கொண்டேன்.. தூங்குவது போல... தூங்கிய விழிகளுக்குள் இரு பூமிப் பந்தாய் மனம் சுழன்றது.. "இன்னும் பார்த்து கொண்டு இருப்பாளோ..... பார்த்து விட்டாளோ... அயோ என்ன நினைப்பாள்....?" என்று தேவையே இல்லாத கற்பனைகளை தொடர விட்டு மீண்டும் கண்களை மெல்லத் திறந்தேன்...... அவள் கண்கள் மூடி இருந்தன.......ஒரு வட்ட தத்துவம் போல.... அல்லது ஜென் கவிதையின் ஜின் சிந்தனையைப் போல...

'இத்தனை விதமாக தூங்க முடியுமா' என்று அவள் ஆச்சரியப் பட வைத்தாள்... திரும்பி படுத்தாள் ... தலைக்கு கையை அணைக் கொடுத்துப் படுத்தாள் ... கால்களை சற்று தூக்கி வைத்துக் கொண்டு படுத்தாள்... ஒருக்களித்து படுத்தாள்... கழுத்தை இப்பக்கம் அப்பக்கம்.. என்று ஒரு ஓவிய தொடரைப் போல அவள் மாறிக் கொண்டேயிருந்தாள்... நான் மனம் முழுக்க அவளை நிரப்பத் தொடங்கினேன்...ஹைகூவின் அடுத்த நிலை என்றே நம்பத் தொடங்கினேன்.... அலை அடித்து மூச்சுத் திண றிக் கொண்டிருந்த மனதுக்குள் பசுமையை சோலையைக் கொண்ட தீவு மடியென இருந்தது... அந்த அமைதியான சோதி முகம்....வீணையடி நீ எனக்கு என்று பாரதி மீட்டிய தந்தியை நானும் மிதித்து... சிறு பிள்ளையாய் நொண்டி விளையாடினேன்...கடைசியில் என்னைப் போலவே.. முதல் படுத்திருந்த நிலைக்கு வந்து விட்டிருந்தாள்.. அவளின் இடது தலைக்கு கை கொடுத்து முகம் என்னைப் பார்ப்பது போல வைத்திருத்தாள்..... அந்த ரயில் முழுக்க நாங்கள் இருவர் மட்டுமே என்பது போல ஒரு சிறுவனின் சிக்கு புக்கு ரயிலை நானே ஓட்டினேன்...

மனதுக்குள் தடக் தடக்.....நரம்புகளில் கரக் முறுக்....

ட்ராக் மாறும் சத்தத்தில்... தாமாக விழித்துக் கொள்ளும் கண்களின் தொடர்ச்சி அவளின் முகத்தை விரித்துக் கொண்டே போனது, மலர் வனக் காட்டுக்குள்.. ஒற்றைப் பூவென...... இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. சட்டென்று விழித்தாள்.... ஆனால் நான்.. சட்டென்று மூடிக் கொள்ளவில்லை.. மைக்ரோ நொடி இடைவெளியில் எங்கள் கண்கள் நன்றாக சந்தித்துக் கொண்ட பிறகுதான் நான் கண்களை மூடினேன், இளையராஜாவின் அசரீரி இசையோடு..........."முகிலினங்கள் அலைகின்றதே... முகவரிகள் தொலைந்தனவோ.... முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ... அது மழையோ...."

எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு காதல்காரன் "மெல்லினமே மெல்லினமே மெல்லிய காதல் பூக்கும்..." பாடலை மிக மெதுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ என்று சத்தமாக என் கற்பனை.. பூரித்தது.... கொலை செய்த தேவதைகளைக் கடந்த மன நிம்மதிக்குள்...தூங்கும் தேவதை.... நிறங்கள் விதைத்தாள்... புதுப் பொருள் தரும்.. சாந்தம்.... மீண்டும் விழித்தாள்.. மீண்டும் மூடினேன்... மீண்டும் விழித்தாள்... மீண்டும் மூடினேன்.. பார்வைகளின் சந்திப்புகளின் மைக்ரோ நொடி, சற்றே நீண்டது..சற்றே பெரிய சிறுகதை போல...அப்படி பார்க்கும் நொடியெல்லாம்.. அர்த்தம் சொல்லும் அல்லது அர்த்தம் வெல்லும் பார்வையின் சப்தத்தை நான் உரிந்து கொண்டே இருந்தேன், ஒரு பசி எடுத்த காதல்காரனாய்.... என்னால் எழுத முடியாத கவிதையெல்லாம் அவளே வைத்திருக்கிறாளோ என்று கூட மனம் தடுமாறியது...தடுமாறினால்தான் அது மனம் என்பது போல...

மீண்டும் ஒரு முறை ரயில் ட்ராக் மாற, சற்று வேகத்துடன் தட தடக்க.. நான் சட்டென்று விழித்தேன்..அவளும் அதே நொடியில் அதே வேகத்தில் விழித்தாள்.. இம்முறை இருவருமே... கண்களை மூடிக் கொள்ளவில்லை.. நேருக்கு நேராய் கண்கள் நான்கும்.. கண நேரத்துக்கும் அதிகமாக பார்த்துக் கொண்டே.. பின் சட்டென...மெல்ல புன்னகைத்து விட்டோம்...நான் நன்றாகவே சத்தம் வராமல் வாய் திறந்து சிரித்து விட்டேன்.. அவள் புன்னகையோடு கண்களை சற்று பெரிதாக்கினாள்... எனக்கு அதன் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை... தேய்ந்து கொண்டே போகும்.. சூரியனைப் போல சுட்டதும், பட்டு சுருங்கியது மனது... வெப்பச் சலனம் வியர்வைக்குள் ஒற்றை உருண்டையை முதுகின் நடு கோட்டில் இறக்கியது... அவள் திரும்பி படுத்து உடலை ஆங்காங்கே சரி செய்தபடியே மீண்டும் எனை நோக்கியே படுத்தாள்...எதை நோக்கியோ நகர்ந்தது... எங்களின் ரயில் கடந்த பயணம்.... ரயில் இப்போது.. திருப்பூர் தாண்டி இருந்தது........

"அய்யோ.. இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை வந்து விடுமே.... என்ன பண்ண..?" என்று மூளை பர பரத்தபடியே மெல்ல இதழ் சேர்த்து... சப்தம் எழாமல்.. "உன் பேர் என்ன?" என்று கேட்டேன்... இப்போது மெல்ல தலையை சரித்து கீழே யாராவது, குறிப்பாக அவளின் அப்பா பார்க்கிறாரா? என்று பார்த்தேன் .. யாரும் பார்க்கவில்லை.. குறிப்பாக அவளின் அப்பா பார்க்கவே இல்லை.. அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்... உதடு சரித்து.. ஏதோ முணு முணுத்தாள்..

ஒன்றும் புரியவில்லை.. மீண்டும் சொல்ல சொல்லுமாறு ஜாடை செய்தேன்... மெல்ல, செல்ல கோபத்தோடு கொண்ட முறைத்தல் போல ஒரு புன்னகை கலந்து மீண்டும் உதடு சரித்தாள்... வீ... என்பது போல பெயர் நீண்டது......இப்போதும் புரியவில்லை.... நான் காசு தொலைத்த சிறுவனாய் விழித்தேன்... ஐயோ.... இத்தனை அழகா இருக்கா... குண்டு குண்டுன்னு.. மொழு மொழுன்னு.. பாக்கவே ஜப்பான் பொம்மை மாதிரிதான் இருக்கா... பேசாம என் கூட வந்துரு"- என்று காமத்தின் திறவு கோலென காதல் கன்னா பின்னாவென வலை வீசியது.... கண்களின் குளத்தில் சிக்கிக் கொண்ட மனதுக்குள் ஆயிரம் மீன்கள்... கவிதை ஆயிரம் காரணத்தோடு... இல்லாமல் எழுதி.....தவித்தது...

என் பெயர் கேட்டாள்...நான் "விஜி... வி........ஜி..." என்றேன்.. அதே மெல்லிய வாய் மூடித் திறத்தலின் மொழியாக...

அவளும் "வீ... .. என்ன.. வீ...?"- என்றே கலவரப் பட்டாள்...இருவருமே.. முகம் அறியா நிழலை விரட்டிக் கொண்டிருந்தோம்..... என் காயங்களுக்கு எல்லாம் அந்த ஒற்றை பார்வையும்.. அருகாமை ஜாடையுமே..மருந்தாகி விட்ட மாயங்களில் நான், தூங்கும் தேவதையையே நினைக்கத் தொடங்கினேன்... மற்றவை மறந்தே போனது... ரயில் கூட மறந்த கணங்களில் தான்....... வடகோவை வந்தே விட்டது.. நண்பனும், தம்பியும் எழுந்து தங்களை தயார் செய்ய.. ஒவ்வொருவராக எழுந்து இறங்குவதற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள் ... நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல்.... ஒரு விழி அவள் மீதும்.. மறு விழி மற்றவர் மீதும் இருக்க.., நானும் காலணிகளை அணிந்து தலை சீவி....பேக் எடுத்துக் கொண்டு தவித்து நிற்க.... அவளின் முழு விழியை அப்பாவின் மீதும் அதில் ஒரு துளி விழியை என் மீதும் வைத்துக் கொண்டே தயார் ஆகிக் கொண்டிருந்தாள்.. அவள் என் தோளுக்கு நிற்கும் அளவான உயரம்.. சற்று கணத்த உடம்பு... காந்த உதடுகளின் வாயிலாக அளவான கண்களின் மொழியாக... முகம் தைத்து பார்வையை மாற்றிக் கொண்டேயிருந்தாள்...... சட்டென காலியான கனவாய்.. நான் மீண்டும்.. தவித்து.. தடுமாறி.. தேவதைக் தூக்கத்துக்கு சாமரம் வீசிக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி நடை பாதையில் நடக்கத் துவங்க..... எனைக் கடந்து முன்னேறிய அவளின் கை என் கைக்குள் வேகமாக எதையோ திணித்து...மறு கணத்தில் பிரிந்து போனது.... நான் குனிந்து கையை விலக்காமலே பார்த்து விட்டு சுய யோசனை வந்து நிமிர அவள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போயிருந்தாள்..... மெல்ல கையை தளர்த்தி விரித்தேன்... ஒரு பஸ் டிக்கெட்டில்...8148476...அலைபேசி எண்..அவளைப் போலவே குண்டு குண்டாய்..... உருண்டிருந்தது ....

இரவுதான் பேச வேண்டும்.....

எல்லா தேவதைகளும்... ஏமாற்றுவதில்லை.....உடல் வலியோடு திரும்பி படுக்கிறேன்... எதிரே அவள் படுத்திருப்பது போலவே ஒரு வெற்றிட வெளி.. நிரம்புகிறது என் அறையெங்கும்.....அது தேவதைகளின் அன்பை மட்டுமே வடிகட்டி விடும்...நம்பிக்கையின் பிடிமானம்.....

தொடரும்......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Oct-15, 6:44 pm)
பார்வை : 486

மேலே