முருகன் பாட்டு

வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -- எந்த
நேரத் திலும் எனைக் காக்குமே; -- அன்னை
நீலி பராசக்தி தண்ணருட் -- கரை
ஓரத்திலே புணை கூடுதே; -- கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே; -- மலை
வாரத்திலேவிளை யாடுவான் -- என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான். 1

வேடர் கனியை விரும்பியே -- தவ
வேடம் புனைந்து திரிகுவான்; -- தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -- முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்; -- சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட -- இருட்
பார மலைகளைச் சீறுவான்; -- மறை
யேடு தரித்த முதல்வனும்;-குரு
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2

தேவர் மகளை மணந்திடத் -- தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்; -- மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்; -- மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்; -- தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்; -- இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்; -- நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்; -- நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3

தீவளர்த் தேபழ வேதியர் -- நின்றன்
சேவகத் தின்புகழ் காட்டினார்; -- ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார் -- நின்றன்
மேன்மையி னாலற நாட்டினார்; -- ஐய,
நீவள ருங்குரு வெற்பிலே -- வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம் -- வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான் -- உங்கள்
இன்னரு ளேயென்று நாடுவோம்-நின்றன் 4
வீரத் திருவிழிப் பார்வையும் -- வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:20 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே