தோத்திரப் பாடல்கள் ஹே காளீ!

எண்ணி லாத பொருட்குவை தானும்
ஏற்றமும் புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்த்திடும் ஒளியும்
வெம்மை யும்பெருந் திண்மையும் அறிவும்
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளீ;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன்.
1

தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்,
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்,
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குறச் செய்வேன்,
ஞான மோங்கி வளர்ந்திடச் செய்வேன்;
நான் விரும்பிய காளி தருவாள். 2


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:02 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே