தோத்திரப் பாடல்கள் யோக சித்தி வரங் கேட்டல்

விண்ணும் மண்ணும்தனியாளும் -- எங்கள்
.வீரை சக்தி நினதருளே -- என்றன்
கண்ணும் கருத்துமெனக் கொண்டு -- அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி -- நான்
பண்ணும் பூசனைகள் எல்லாம் -- வெறும்
பாலை வனத்தில்இட்ட நீரோ? -- உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ -- அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?
1

நீயே சரணமென்று கூவி -- என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு -- அடி
தாயே எனக்குமிக நிதியும் -- அறந்
தன்னைக் காக்குமொரு திறனும் -- தரு
வாயே என்றுபணிந் தேத்திப் -- பல
வாறா நினது புகழ் பாடி -- வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதோர் அழகோ? 2

காளீ வலியசா முண்டி -- ஓங்
காரத் தலைவியென் னிராணி -- பல
நாளிங் கெனையலைக்க லாமோ? -- உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ -- மலர்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன் -- அது
தாரா யெனிலுயிரைத் தீராய் -- துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன் -- கரு
நீலியென் னியல்பறி யாயோ? 3

குறிப்பு: இப் பாடல்களில் வரும் காளி, சக்தி, மாரி முதலியன உலகத்தின்
மூலசக்தியைக் குறிக்கும் பெயர்களாம்.

[முதற் பதிப்பு]:?தவறுவ தொருலகோ??

தேடிச் சோறுநிதந் தின்று -- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ? 4

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -- என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -- இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து -- மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -- என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். 5

தோளை வலியுடைய தாக்கி -- உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி -- அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும் -- கட்டு
மாறா வுடலுறுதி தந்து -- சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் -- ஒளி
நண்ணித் திகழுமுகந் தந்து -- மத
வேளை வெல்லுமுறை கூறித் -- தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும். 6

எண்ணுங் காரியங்க ளெல்லாம் -- வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் -- தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும் -- சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் -- மிக
நன்றா வுளத் தழுந்தல் வேண்டும் -- பல
பண்ணிற் கோடிவகை இன்பம் -- நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
7

கல்லை வயிரமணி யாக்கல் -- செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் -- வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் -- பன்றி்ப்
போத்தைச் சிங்கவே றாக்கல் -- மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல் -- என
விந்தை தோன்றிட இந்நாட்டை -- நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி -- வெற்றி்
சூழும் வீரமறி வாண்மை 8

கூடுந் திரவியத்தின் குவைகள் -- திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் -- இவை
நாடும் படிக்கு வினைசெய்து -- இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக் -- கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய் -- அடி
தாயே உனக்கரிய துண்டோ? -- மதி
மூடும் பொய்ம்மையிரு ளெல்லாம் -- எனை
முற்றும் விட்டகல வேண்டும்;
9

ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை
அச்சம் போயொழிதல் வேண்டும் -- பல
பையச் சொல்லுவதிலுங் கென்னே-முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-என்னை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் -- இனி்
வையத் தலைமையெனக் கருள்வாய் -- அன்னை
வாழி, நின்னதருள் வாழி.
ஓம் காளி வலிசாமுண்டீ
ஓங்காரத் தலைவி என்இராணி.
10


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 11:08 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே