கரையேதுமில்லை
மீன்கள் அள்ளிய வலையாய்க் கடலை
கரையிழுத்து வந்த அதிகாலைப் பெண்டிர் நாம்
இரவின் ரகசியங்களைக் கிழிக்கும் மூர்க்கத்துடன்
நம்மிருவரின் கணக்கற்ற இயக்கங்களாலான உடல்களால்
இரவின் நீலவர்ணத்தை அளந்தவர்கள் தோலுரித்தவர்கள் நாம்
அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை
கடலை அளக்க நீந்திய இரு மீன் குஞ்சுகளைப் போல
அளந்து நடக்கப்பணித்த கால்களைத் துறந்தோம்
நீந்தி நீந்திக் கரை மறந்தோம்
ஆழக்கடலில் சூரியன் தெரிந்தது
மெலிந்த உதடால் மழைநீரின் ஒவ்வொரு துளியையும்
கவ்விச் சுவைத்த முத்துச்சிப்பியைப் போல்
உன் காமத்தின் பெருமழையைத் துளித்துளியாய்க் குடித்தேன்
உன் காதல் என்னிடம் மண்டியிட்டது
என் காதல் உன்னிடம் முறையிட்டது
எத்தனை முறை கரை எழுப்பினாலும்
அதை அழிக்கும் அலை வேகத்துடன் புரண்டெழுந்தது
கரையில் சூரியன் எழுந்தது
நம் காதலர் தலைமீது
நாம் சவுட்டிய பாதங்களை
அவர்கள் தம் உள்ளங்கைகளில் வாங்கினார்கள்
பருகினார்கள் நம் காதலின் கன மழையை
கரையேறிக்கிடந்தோம் ஆழம் துளைத்த வாகையுடன்
மழை தீர்ந்து சிவப்பேறிய அதிகாலை
நமக்கு மேலே நீர்ப்பறவைகள் பறந்து போயின
பேரின்பக் கூவலிட்டு
மணமேடை ஏறி நின்று
கருத்த திண்முலைகளைப் பரிசளிக்கத் தயாரானாய்
என் முத்தங்களால் தொடுத்திருந்த அம்மணமாலை
உதிர்த்து ஒவ்வொன்றையும் நட்சத்திரம் ஆக்குபவனுக்கு
இப்பொழுதும் உனக்காய் வானத்தை விரிப்பேன்
என் மடியில் கடலலைகள் ஆர்ப்பரிக்க...
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
