இறுகிய பாறை

இறுகிய பாறையின் ஊடே
இறங்கி பிளக்கும் வேரென
பரவுகிறது கோபம்

அறிவின் நீள்சமவெளியெங்கும்
அடைக்கப்பட்ட ஊற்றுக் கண்களில்
கசிகின்றது இருள்

மடமை சுமைகளை ஏற்றியேற்றி
நீள்கிறது மூடநம்பிக்கையின் கம்பி

மதத்தின் போதை
கண்களை மறைக்க
அரங்கேறுகின்றன பிரார்த்தனை
பயங்கரங்கள்

ஒளியை உறிஞ்சிக் கருத்த
இரவு மரங்களாய் கிடக்கின்றன
மூட மனிதங்கள்

பகுத்தறிவின் பாதைகளைத் தூர்க்கும்
பக்தி மாயைகளை
விரட்டித் துரத்த தேவை
அம்பேத்கரின் ஒரு துளி மையோ
பெரியாரின் கைத்தடி நுனியோ!


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:04 pm)
பார்வை : 55


மேலே