காலம் தொலைத்த வாழ்வின்!

காலம் தொலைத்த வாழ்வின்

இருப்புகள்

கைகள்ளில் ஊன்றுகோல்களாயின


சுருங்கிய தோலும்

நரைத்த முடியும்

வற்றிய உடலும்

நாட்கள் நகர்த்திய காய்கள்


அனுபவத்தின் நதிகள்

வற்றிக் கிடக்க

மீந்திருக்கும் கட்டங்களை

நிரப்பி முடிக்க

எத்தனிக்கும் மனதின் அலைகள்


திறக்கப்படாத கதவுகளும்

மறுக்கப்பட்ட வழிகளும்

நெடுகிலும் நிறைந்திருக்க

பள்ளங்களையும் மேடுகளையும்

பார்வையால் தடவி

தத்திதத்தி

நடக்கின்றன கால்கள்


அறிவிக்கப்படாத முடிவுகளுக்காய்

கண்கள் முளைத்த கோல்களை

செலுத்தி தட்டுகிறது முதுமை


ஆசைகள் தூர்ந்துபோன வாழ்வில்

பாம்பு கடிபட்ட

தாயத்தைப் போல

மீண்டும்

கீழிருந்தே ஆரம்பமாகிறது

ஆட்டம்


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:13 pm)
பார்வை : 59


பிரபல கவிஞர்கள்

மேலே