வசந்த கால நதிகளிலே

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:14 pm)
பார்வை : 133


பிரபல கவிஞர்கள்

மேலே