வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்

ஒளி படத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்கு வாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

மெய்ம்மை கொண்ட நூலையே - அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே - நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா

இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே - நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே - முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் - பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழும சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே - நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 6:11 pm)
பார்வை : 27


பிரபல கவிஞர்கள்

மேலே