தெய்வ தரிசனம்

தெய்வ தரிசனம்;;;;
(சிறுகதை)

அன்றைய தபாலில் வந்திருந்த கடிதத்தை கணவனிடம் நீட்டினாள் சுதா. அது பிரிக்கப்பட்டிருப்பதை அவன் யோசனையுடன் பார்க்க “நான்தான் பிரிச்சுப் படிச்சேன்!” அவளே வாக்குமூலமும் தந்தாள். மெலிதாய் முறுவலித்தபடி கடிதத்தை படிக்க ஆரம்பித்தான் ரகுநாதன்.

‘த பாருங்க!...அப்பனையும் ஆத்தாளையும் முழுங்கிட்டு ஆறுமாசமா தனியாளா கிராமத்துல கெடந்த உங்க அண்ணன் மகனுக்கு திடீர்ன்னு பாசம் பொத்துக்கிச்சாம்!...நம்மையெல்லாம் பார்க்க வர்றானாம்..!...அனாதைச்சனியன்….வந்து என்னத்தைக் கேட்கப் போகுதோ?...ஐயாயிரம். குடு…பத்தாயிரம் குடு”ன்னு கேட்கப் போகுதோ?...இல்லை….அங்க தனியா இருந்து பார்த்துட்டேன்…முடியலை..அதனால இனி ஆயுசு பூராவும் இங்கியே ஒட்டிக்கறேன்”ன்னு அடைக்கலம் கேட்கப் போகுதோ தெரியலையே!”

தலையைத் தூக்கி அவளை எரிப்பது போல் பார்த்த ரகுநாதன் “கொஞ்சம் கடிதத்தைப் படிக்க விடறியா?”

“படிங்க…நானா வேணாங்கறேன்?...முன்னாடியே படிச்சிட்டதால விவரத்தைச் சொன்னேன் அவ்வளவுதான்!”

நிதானமாய்க் கடிதம் முழுவதையும் படித்து முடித்த ரகுநாதன் யோசனையுடன் மேவாயைத் தடவ,

“நீங்க எதையும் யோசிக்கவே வேண்டாம்!...இந்த ஒரு விஷயத்திலாவது புத்திசாலித்தனமா நான் சொல்றதைக் கேட்டு அப்படியே நடந்துக்கங்க!”

“நீ என்ன சொல்ல வர்றே..சுதா?”

“புதன்கிழமைதானே வர்றதா எழுதியிருக்கான்?...நீங்க செவ்வாய்க்கிழமையே கிளம்பி பழனி போய்டுங்க!...நீங்க இங்க இருந்தாத்தானே எதையாவது கேட்டு வைப்பான்…நீங்களும் இல்லேன்னு சொல்ல தைரியம் இல்லாம “சரி”ன்னு பூம்…பூம் மாடு மாதிரி தலையை ஆட்டித் தொலைப்பீங்க!..அதனால நீங்க இங்க இருக்கவே வேண்டாம்…நான் அவன் வந்ததும் நீங்க கோவிலுக்குப் போயிட்டதா சொல்லிட்டு “நானும் எங்கம்மா வீட்டுக்குக் கௌம்பிட்டிருக்கேன்”ன்னு சொல்லிடறேன்!”

ரகுநாதன் சற்றுத் தயங்க

“சரி..ஏதோ டீஸண்டாத் திருப்பியனுப்பறதுக்கு வழி சொன்னேன்…இதுக்கும் “ம்ஹூம்” சொன்னீங்கன்னா அப்புறம் நேரிலேயே…பேசித் துரத்தியடிக்கறதைத் தவிர வேற வழியில்லை”

சுதா அப்படிச் செய்யக் கூடியவள்தான் என்பதை உணர்ந்த ரகுநாதன் “சரிடி…நீ சொல்ற மாதிரியே நான் பழனி கிளம்பிடறேன்!...நீயும் அவன்கிட்டப் பார்த்துப் பேசு….ரொம்பத் தரக்குறைவாப் பேசி…மரியாதைக் குறைவா நடத்திடாத…பாவம்!”

“சரி…சரி” ஏதோ இந்த மட்டிலாவது ஒப்புக் கொண்டாரே என்கிற சந்தோஷத்தில் தலையாட்டினாள் சுதா.

புதன்கிழமை. பழனி கோவிலில் முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு கோவிலை சுற்றி நடந்து கொண்டிருந்த ரகுநாதன் செல்போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தான். சுதா!

“ஏங்க…என்னாச்சு…சாமி தரிசனம் முடிஞ்சதா?”

“ம்ம்..ஆச்சு…ஆச்சு!...அது செரி…அவன் வந்துட்டானா?...பேசித் திருப்பியனுப்பிட்டியா?”

“ம்..அவரு வந்துட்டாரு…சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்திட்டிருக்காரு”

“என்னது….அவரா?...ஏய்…என்னாச்சு உனக்கு?”

“அதெல்லாம்…நேருல…பேசிக்கலாம்…தரிசனம்…முடிஞ்சுதல்ல?...உடனே….
பொறப்பட்டு வாங்க!”

“அவன் போகட்டும்..அப்புறம் வர்றேன்!”

“அவரு போக மாட்டாரு….நீங்க வந்ததும் உங்களைப் பார்த்துப் பேசிட்டுத்தான் போவாரு!”

குழப்பத்திலாழ்ந்த ரகுநாதன் “சரி…நான் உடனே கிளம்பி வர்றேன்…எப்படியும் ராத்திரி ஒன்பதுக்குள்ளார வந்துடுவேன்!

இரவு ஒன்பதே முக்கால் மணி வாக்கில் வீட்டிற்குள் நுழைந்த ரகுநாதனை எதிர் கொண்டு வரவேற்றான் அவன் அண்ணன் மகன் தனபால். “எப்படியிருக்கீங்க சித்தப்பா…கோவில்ல கூட்டமா?”

“ம்…ஓரளவுக்கு கூட்டம்தான்…சரி…நீ சாப்பிட்டியா?”

“நான் சாப்பிட்டாச்சு…நீங்க சாப்பிட்டுட்டு வாங்க அப்புறம் பேசுவோம்!”

இரவு பத்தரை மணி வாக்கில் காற்றாட மொட்டை மாடியில் அமர்ந்து பேச ஆரம்பித்த போது அந்த தனபால் சொன்ன விஷயம் ரகுநாதனை வாயடைக்க வைத்தது.

“ஆமாம் சித்தப்பா…மேக்காலத் தெருவுல அந்தக் கடைசி வீட்டுல ஒரு கெழவி பல வருஷமா சாகாம இழுத்திட்டே கிடந்ததல்ல?...அந்தக் கெழவி பதினஞ்சு நாளைக்கு முன்னாடி செத்துப் போயிடுச்சு!...யாருமே இல்லாத அந்த அனாதைக் கெழவியோட வீட்டை பஞ்சாயத்துக்காரங்க சோதனை போட்டு பத்திரங்களையெல்லாம் எடுத்துப் படிச்சுப் பார;த்ததுல அந்த வீட்டையும்…மலையடிவாரத்துல கெழவி வாங்கிப் போட்டிருக்கற பத்து ஏக்கா; நெலத்தையும் என்னோட தாத்தா…அதாவது உங்க தகப்பனார் பேருக்கு எழுதி வெச்சிட்டுப் போயிருக்கு!”

விழியிமைக்காமல் பார்த்தபடியே நின்றிருந்தான் ரகுநாதன்.

“அப்படிப் பார்க்கும் போது அந்தச் சொத்துக்கு இன்னிக்கு தேதில வாரிசுக…நீங்களும் நானும்தான்!...ஆனா பஞ்சாயத்துல என்ன சொன்னாங்க…இந்த ஊர்ல இருக்கற பூர்வீக சொத்துக்கு பாத்தியதை உள்ளவங்க இந்த ஊர்ல இல்லாம வெளியூருக்குப் பொழைக்கப் போயிட்டா அவங்க பாத்தியதை ரத்தாயிடும்….ஆனாலும் பங்காளிகளா இருக்கறவங்க பிரியப்பட்டா அவங்களுக்கும் பங்கு தரலாம்னு சொன்னாங்க…”

ரகுநாதனின் விழியோரம் லேசாய் நீர்க்கசிவு.

“நான் என்னோட விருப்பத்தை பஞ்சாயத்துல சொல்லி சொத்தை ரெண்டு பங்காப் போடச் சொல்லி…இதோ உங்க பங்குக்கான பத்திரங்களைக் கையோட கொண்டு வந்திருக்கேன்!...உங்களை நேர்ல சந்திச்சு இதை உங்க கைல கொடுத்திட்டுப் போனாத்தான் எனக்கு நிம்மதி!”

ரகுநாதனின் மனம் நீர் வயல் போல் நெகிழ்ந்து போயிருந்தது. “நிச்சயம்….இன்னிய தேதியில் அந்தப் பாதிச் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி தேறும்…இதை இவன் சொல்லாமலே விட்டிருந்தாக் கூட எனக்குத் தெரிய வர துளிக்கூட சந்தர்ப்பமில்லை!....ஆனாலும் மறைக்காமல் பஞ்சாயத்துல என்னை விட்டுக் குடுக்காம எனக்காகப் பேசி…எனக்கொரு பங்கைக் கொண்டு வந்திருக்கான்னா…இவன்…இவன்….எப்பேர்ப்பட்ட மனசுக்காரன்…இவனைத் துரத்தறதுக்காக நான் பழனிக்கு ஓடினேன்…ச்சே!” திரும்பி சுதாவைப் பார்த்தான் ரகுநாதன். அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் வழக்கம் போலவே இருக்க

‘பாவிப் பெண்ணே…அஞ்சாயிரம் குடு…பத்தாயிரம் குடுன்னு கேப்பான்…இல்லேன்னா ஆயுசு பூராவும் நம்ம கூடவே ஒட்டிக்கறேன்னு கேப்பான்”ன்னு சொன்னியே…பார்த்தியா அவன் சா;வ சாதாரணமா ஒண்ணேகால் கோடி ரூபாய்ச் சொத்தை அள்ளி வீசிட்டுப் போறதை!”

“சரிங்க சித்தப்பா…டாகுமெண்ட்களையெல்லாம் பத்திரமா பீரோவுல வெச்சுக்கங்க!...நான் காலைல நேரத்துல எந்திரிச்சு மொத பஸ்ஸூக்குக் கௌம்பறேன்!” அந்த தனபால் எழுந்து உறங்கப் போனான்.

(முற்றும்)

எழுதியவர் : முகில் தினகரன் (20-Jan-13, 2:27 pm)
சேர்த்தது : mukil dinakaran
பார்வை : 99

மேலே