காணி நிலம் வேண்டும்

காணி நிலம் வேண்டும்
அஃது அடர்ந்த காடாக
இருந்தாலும் பரவாயில்லை..

அங்கே
சிங்கம் புலி கரடி
கொடிய விலங்குகள்
குடியிருந்தாலும் பரவாயில்லை

இன்னும் கொடிய
ஓநாய் கழுதைப்புலி
ஓலமிட்டு அலைந்தாலும்
நரியும் பாம்பும் முதலையும்
இருந்தாலும் பரவாயில்லை...

அங்கே
மதவெறி பிடித்த
மனிதர்கள் மட்டும்
இருக்க வேண்டாம்

மனிதாபிமானத்தை
அபிமானமாய்த் தின்னும்
மூடமனிதர்கள் வேண்டாம்

யானைக்கு மதம் பிடித்தால்
அதுவாகவே அடங்கி விடும்
அங்குசத்தைக் காட்டியும்
அடக்கிவிடலாம்..........
மனிதர்களுக்கு மதம் பிடித்தால்
எதைச் சொல்லி அடக்குவது ...?
எதைக் காட்டி அடக்குவது...?

.....பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (20-Feb-13, 5:56 pm)
பார்வை : 148

மேலே