மகளிர் தின வாழ்த்துகள்

நான்
மகளிர் தின வாழ்த்துகள்
சொல்ல விரும்பியது:

"'உணவு தயாரிக்க
நேரமாகிவிட்ட
இரவுகளில்:

உறங்கி விட்ட
என்னை எழுப்பி
உணவு ஊட்டி,

நாங்கள் உண்டதால்
உணவு
தீர்ந்து போய் விட

அடியில் ஒட்டியிருந்த
உணவை
அடியில் தேங்கியிருந்த

குழம்புடன் பிணைந்து -
உண்ண
செல்லும் வேளையில் :

எனக்கு –
என நீண்ட
என் கையில் கொடுத்து

நான்
உண்பதை ரசித்து -
அவள் பசி மறந்த ,

கால் வலியினால்
தூக்கம் வராமல்
புரண்டு படுத்த நேரங்களில்:

என் காலை
அவள் மேல் போட்டு
உறங்க வைத்த,

இன்று வரையில் - என்னை
குழந்தையாய் பார்க்கும்’’
என் அன்னைக்கு தான்..!

நான் அவளுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்
சொல்ல

என்னடா சொன்ன
என்று
புரியாமல் அவள் கேட்க

என்னை படிக்க வைத்த –
அவள்
படிக்கவில்லையே

என்பது நினைவுக்கு
வர
அமைதியாகி விட்டேன்..!

எழுதியவர் : மதன்... (9-Mar-13, 9:15 pm)
பார்வை : 143

மேலே