காதல் மரம்

எப்படியேனும் என்னை நீ
திரும்பப் பெறக்கூடும்
நிறைந்த காதலுடன்
நானும் உன்னை
கைப்பிடிக்கக் கூடும்

இது சாத்தியப்படும் என
உன்னிடம் விளக்கிட
புறாவைத் தேடினேன்
தூதனுப்ப
கிடைக்கவில்லை

என் மனதில்
இன்றிருக்கும் வேதனையை
பகிர்ந்திடச் சொல்லிட
குயிலைத் தேடினேன்
கிடைக்கவில்லை

என்னைக் காணாது தவித்து
கோபப்பட்டிருக்கும்
உன்னை சாந்தப்படுத்த
குளிர் தென்றலை
அனுப்பலாமெனில்
அது மண்ணை வாரி
தூற்றிச் செல்கிறது

இந்த வேதனைகளை
மரங்களிடம் சொல்லி
பாரத்தை
இறக்கி வைக்கலாமெனில்
மரங்களும்
விறகுகளாகிவிட்டன

நம் காதலை வாழ்த்திய
பறவைகளில்லை
சுகமாய் நம்மை அணைத்த
தென்றலில்லை
நிழல்மடி கொடுத்த
மரங்களில்லை
பஞ்சுமெத்தை விரித்த
புல்வெளியில்லை

ஆம் கண்ணே !
நாம் காதலை வளர்த்த
இந்த வனத்தில்தான்
இல்லை இல்லை...
வீட்டு மனைக்காகவும்
தொழிற்சாலைக்காகவும்
இன்று
சமன் செய்த
இடத்திலிருந்துதான்
நின்று தவிக்கிறேன்

நமக்குத் துணையாய் இருந்த
இயற்கையை இழந்துவிட்டு !

என் காதல் நினைவுகள்.,
நாம் அமர்ந்த நடந்த
விளையாடிய
இடங்களிலெல்லாம்
இன்று நடப்பட்ட
அளவு கற்களைப்போல்
ஜடமாய் கிடக்கையில்
எப்படி வ[ள]ரும் காதல் ?

அந்த வனத்தைப் போல
இன்னொரு வனம் செய்ய
முடியாவிட்டாலும்
ஒரு மரத்தையாவது
நட்டு வைக்க வேண்டும்
கண்ணே

அதற்கு
காதல் மரம் என்று
பெயர் வைக்கவும்
அந்த நன்றிக் கடனை
செலுத்தவும் !

காங்கிரீட் கட்டிடங்களால்
நிரம்பும்
பாவப்பட்ட பூமி மீதும்
இயற்கை மீதும்
உனக்கும் இரக்கம்
இருக்கும்தானே ?!

எப்படியேனும் என்னை நீ
திரும்பப் பெறக்கூடும்...

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (13-Mar-13, 4:59 pm)
Tanglish : kaadhal maram
பார்வை : 125

மேலே