மதம் ஒழிப்போம்-II-கே.எஸ்.கலை

சதைமேனி மண்ணுக்குள்
▬▬சடலமாகி புதைந்தபின்னும்
விதை தின்ற விஷத்தாலே
▬▬பாழ் விருட்சம் பிறப்பெடுக்கும்-
புதை குழியின் புழுக்களையும்
▬▬சத்தியமாய் அழுக்காக்கும் !

தட்டிக் கேட்டால் தலைவீங்கி
▬▬தற்குறியென சுட்டிக் காட்டும்
தரித்திரமாய் இருக்கும் கதை
▬▬மாத்திரம் தான் உண்மையென-
புரிந்துக் கொள்ள புத்தியில்லா
▬▬புருஷர்களின் உலகம் அன்றோ !

சாமான்யன் சல்லி தின்று
▬▬சாமியெல்லாம் செல்வந்தமாய்
வாழும் இந்த உலகினிலே -
▬▬சில்லறைக்காய் பல உயிர்கள்
சீரழிந்து நிற்கும் போதும்
▬▬சிறு குணங்கள் வாழுமிங்கே !

நாதியற்று நடுத்தெருவில்
▬▬நன்மக்கள் திரியும் போது
ஆதியற்ற சாமி வந்து
▬▬காத்த கதை கேட்டதுண்டோ ?
நீதியற்ற கதை மட்டும்
▬▬நீடூழி வாழும் இங்கே !

வேதனைகள் நிறைந்து நிற்க
▬▬வெட்டிக் கதை பேசி நித்தம்
சோதனைகள் செய்து அவன்
▬▬சோதிப்பான் காப்பான் என்று-
போதனைகள் மட்டும் செய்து
▬▬போதை உண்டு வாழ்கிறார்கள் !

பித்துக் கூட்டம் கைகோர்த்து
▬▬புத்திக் கெட்டு வாய்பிளந்து
சத்தமிட்டால் சரியும் மலை
▬▬என்றெண்ணும் இழிவு நிலை
முற்றிலுமாய் மாற்றம் பெற
▬▬ஆகும் கொஞ்சம் பெரியவிலை !

குற்றமென்று அறிந்து சிலர்
▬▬அதுவறியா மற்றும் பலர்
கெட்டு கெடுத்து வாழும்புவி
▬▬சுத்தமற்று சுழலும் போது
துப்புரவாய் சுத்தம் செய்ய
▬▬தேவை பல விளக்குமாறு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (23-Apr-13, 9:26 am)
பார்வை : 784

மேலே