கூடுகள்
கூடுகள்
======================================ருத்ரா
சாய்வு நாற்காலியில்
சாய்ங்கால நேரத்து
சுமையையெல்லாம்
முதுகெலும்பில்
ஏற்றிக்கிடந்தேன்.
பட்டை பட்டையாய்
நீள நீளமாய்
அந்த வர்ணங்களின்
சமுக்காளத்துணியில்
துடிப்புகளும் தூண்டில்களுமாய்
துள்ளிக்கிடந்தேன்.
பால் சங்கு
தொண்டைக்குழி வழியாக
"பாச ஸ்பரிசத்தை"
பாய்ச்சியதிலிருது
அந்த கார்வை தொடங்கியது.
சப்பாணி பருவம் ..சிறுதேர்ப்பருவம்
எல்லாம் முடிந்து
ஒரு நிலையில்லாமல் நிலைக்கு வந்தது தேர்.
அப்புறம் பம்பரத்தின் ஆணி
தரையில் புண்கள் ஏற்படுத்திய போது
ஒவ்வொன்றும்
அவை நட்சத்திரங்கள்.
வானம் ஊமையாய் அழுதது
மொட்டைமாடியில்
வடாம்பிழிந்த
சைவக்கருவாடுகளாய் சிதறிக்கிடக்கின்றன.
ஒருநாள்
வார்வைத்து தைத்த
அந்த அரைக்கால் சட்டைப் பைக்குள்ளும்
அந்த அதிசய வானவில்
நிரோத்துகளை சுருட்டிப்போட்டிருந்தது.
பலூன் விளையாட்டுக்கு
அவை வரவில்லை என்று புரிந்தது.
எதிர் வீட்டுப்பெண்
கண்களை கசக்கிக்கொண்டு
புகார் கொடுத்ததில்
இந்த விடலையின் பூம்புகார்
சிலம்புகள் உடைத்தன.
போதும்.
வயதுகள் தேவையில்லை.
இந்த பூனைமயிர்கள் போதும் என்று
கெட்டி மேளம்
கிழிந்து கிழிந்து ஒலிக்கும் தவில்
மாங்கல்யம் தந்துனானே சகிதம்
அவன் கழுத்தில் பாறாங்கல்
மாங்கல்யம் சூட்டியது.
அது முதல்
வாழ்க்கை எனும்
கழுமரங்கள் முளைத்துக்கொண்டேஇருந்தன.
வேலையில்லை
ஆனால் முதலைக்குட்டிகளாய்
வாரிசுகள்.
பெண்குட்டிகளுக்கு
அந்த நீலிக்கண்ணீரே அழகு.
ஆண் அரக்கக்குட்டிகளுக்கு
நெடும்பல்கள் நிறைய உண்டு
அவை குத்திக்கிழித்தால்
விந்து ரத்தம்
நிறைய நிறைய
உடற்காடுகள் உற்பத்தியாகும்.
தீனிகளுக்கு
தினம் தினம் உறுமல் குப்பைகள்.
தூக்கி பெருக்க துடைப்பம் இல்லை.
தெருவெல்லாம் சோமபானம்
சீசா சீசாவாய்
தீவுகள் காட்டின
மரண அலைகளுடன்.
வாழ்க்கை வாழ்க்கை தானே!
ஆயிரம் ஆயிரம் மெகாதொடர்களை
பிதுக்கி பிதுக்கி
காலம் மலங்கழித்தது.
சொர்க்கம் தோலுரிந்து நரகம்
நரகம் பிரவித்த சொர்க்கம்.
பிரசவம் ஆன பின்னணி
ரத்த சதையாக
கன்று ஈன்றபின் வரும் மிச்ச
இளங்கொடிகளாக
ஆலமரக்கிளைகளுடன்
கண்ணீர் விழுதுகளை இறக்கியது.
வாழ்க்க்கை பறந்து களைத்த
கொக்குகளின் பஞ்சு இறக்கைகளாக
வீதியில் கிடந்தது.
பஞ்சுகளும் ஆயிரம் ஆயிரம் டன்
நியூட்ரான் குண்டுகள்.
எப்போது வெடிக்கும்.
பிரம்ம முகூர்த்தம்
இன்னும் நிச்சயிக்கபடவில்லை.
இருப்பினும்
வளைந்த இந்த எலும்புக்கூடுகள் மேல்
எலும்புக்கூடுகளுக்கு மேல்
எலும்புக்கூடாக
கூடுகள்
அடுக்கிக்கொண்டே போயின.
அழுக்கேறிய
முரட்டு வர்ண சமுக்காளம்
கருங்காலிமர எலும்பில் செய்த
அந்த சாய்வு நாற்காலியில்
இன்னும் அது படுத்திருக்கிறது.
பில்லியன் பில்லியன்
நாபித்தொப்பூள் கொடிகளின்
பூர்வ உத்தர மீ "மாம்ஸ" நாற்றம்
சகிக்காமல்
பாற்கடலின் பாஞ்ச சன்யம்
இங்கு வந்து படுத்திருக்கிறது.
"பீடை"
"தூக்கி நெருப்பில் போடு"
எவனொ
ஒரு பேரனுக்கு பேரன்
பேரம் பேசிக்கொண்டிருந்தான்.
"எவ்வளவ்யா கூலி வேணும்"
=========================================ருத்ரா