சுவாமிகளும் தாசிகளும்...

நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் ''நமது நாட்டு கடவுள்களே'' வழிகாட்டிகளாக இருக்கிறார்கள்.

அதாவது, சூது, வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவா இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக்கொண்டாலும் சில சில கடவுள்களிடத்தில் தனித்தனியாகவும், சில்லறையாகவும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படியும், மாதப்படியும், வருசப்படியும், காலஷேப மூலமாகவும், நடிப்பு மூலமாகவும் நடத்தி காட்டிக்கொண்டும் வருகிறோம்.

இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்துவரச் செய்கிறார்கள், தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களை பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி உண்டாகக்கூடும்? இம்மாதிரியான தர்மங்களை பரிபாலனம் செய்யும் மக்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க முடியும்? கடவுள்களும், கடவுள் பற்றிய கதைகளும், புராணங்களும் மற்றும் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் உண்டாக்குவதற்கு உண்டாக்கப் பட்டவையே அன்றி இம்மாதிரி பலன்களுக்கு உண்டாக்கப்பட்டதாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது,

மேற்கண்ட அநேகவிதமான ஒழுக்கக் குறைவுகள் கடவுள் பெயரால் நடப்பவைகளுள் இதுசமயம் சுவாமியின் பெயரால் பெண்களுக்கு விபச்சாறித் தனத்திற்கு அனுமதி சீட்டு (பொட்டுக் கட்டுதல்) என்னும் லைசென்சு கொடுக்கப்படுவதைப் பற்றி மாத்திரம் இவ்விசயத்தில் எடுத்துக் கொள்வோம்.

கோயில்களுக்கு தாசிகள் என்னும் விலைமாதர்கள் எதற்காக வேண்டும்? மேளமடித்தல், மணியடித்தல் முதலிய காரியங்கள் எதற்காக பூசைக்கு உபயோகப்படுகிறது என்று யாராவது கேட்டால், சுவாமிக்கு தீ பாராதனை ஆகும்போது வேறு சப்தங்கள் காதில் விழாமல் இருக்கும் பொருட்டு மணிச் சப்தங்களும் மேள வாத்தியங்களும் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

இது சரியோ, தவறோ அதைப்பற்றி நாம் இப்போது விவரிக்க வரவில்லை, வேறு சப்தங்கள் காதில் படாமல் இருப்பதற்கு மணியும் மேளமும் வைத்திருப்பதானால் விலைமாதர்களான விபச்சார ஸ்திரீகளை கோயிலில் நிறுத்தி இருப்பதன் காரணம் என்ன?

என்று இந்த முறையில் யோசிப்போமானால் சுவாமி தீபாராதனையின்போது பக்தர்களுக்கு வேறு சாமான் கண்களில் படாமல் இந்த விபச்சாரிகளை நிறுத்தி வைத்திருப்பதாகத்தான் கொள்ள வேண்டும், இதை யாராவது அறிவாளிகள் வேலை என்று சொல்லக் கூடுமா-?

நமது நாட்டில் விபச்சாரத்திற்காக பொட்டுக் கட்டிக்கொள்ளும் தாசிகள் எல்லோரும் ஒவ்வொரு சுவாமியின் பெயரால்தான் தங்களைப் பொதுமகள் என்று முடிவுகட்டி விளம்பரபடுத்திக் கொள்கிறார்களேயல்லாமல், வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழி இல்லாததால் இந்த வியாபாரத்திற்கு போகிறேன் என்று யாரும் சொல்வதே இல்லை,

இந்த மாதிரி அனுமதிச்சீட்டு கொடுக்கும் கடவுள் வேறு எந்த மதத்திலாவது இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்த்தால் நமது அறியாமையும் நமது கடவுளுக்கு நாம் செய்யும் இழிவு காரியமும் புலப்படாமல் போகாது.

தவிர, வேறு விவகார முறையில் பேசுவதானாலும் அதாவது, கடவுளுக்குப் பணி செய்ய இவர்கள் கோயிலில் நியாமிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதானாலும், இருந்திருந்து கடவுளுக்கு பணி செய்ய இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களைத்தானா நியமிக்க வேண்டும்; வேறு யோக்கியமான தொழிலில் உள்ள பெண் மக்கள் உங்கள் சமுதாயத்தில் இல்லையா என்று யாராவது கேட்டால் அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லக்கூடும்-?

இம்மாதிரி ஒவ்வொரு முக்கிய கோயிலிலும் பூசை காலத்தில் 10, 20, 30 சில கோயில்களில் 100, 150 வீதம் விபச்சாரப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு, கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினால் அந்த பக்தர்களின் கதி என்ன ஆவது-?

கிராமாந்தரங்களில் எந்தக் கோயிலில் பார்த்தாலும் உள்ளதுக்குள் நன்றாய் கொஞ்சம் அழகாய் இருக்கிற தாசிகள் முதலாவது தர்மகர்த்தாவுக்குஅல்லது அவர்கள் மக்களுக்கு, அதற்கடுத்ததுதான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு என்பதாகவே வழக்கமாயிருக்கிறது.

கிராமாந்தரங்களில் உள்ள கோயில்களின் கதி இப்படியென்றால் சில பெரிய பட்டணங்களிலும், முக்கிய ஸ்தலங்களிலும் உள்ள கோயிலின் சங்கதி கேட்கவேண்டியதில்லை.

விசேஷ ஸ்தலங்களில் உள்ள கோயில்களின் தாசிக்கு பெரும்பான்மையும் அந்த கோயிலின் அர்ச்சகர்கள் முதலியவர்களே தரகர்களாகி விடுகிறார்கள்.

அவர்கள், சுவாமிக்கும் நமக்கும் இடையில் எப்படி தரகர்களாக இருக்கிறார்களோ அதுபோலவே இந்த 'அம்மன்களுக்கும்' நமக்கும் தரகர்களாக இருந்துகொண்டு யாத்திரை வாலிபர்களை பாழாக்கி விடுகிறார்கள்.

சுவாமி பக்திகாக கோயில்களுக்குப் போகும் பக்தர்கள் நாளா வட்டமாய் பழகி தாசி பக்தர்களாகிவிடுவதை நாம் எத்தனையோ பார்த்திருக்கிறோம்.

இந்த அநாகரிகமும் கொடுமையுமான காரியங்கள் மதத்தின் பெயராலும், சுவாமியின் பெயராலும் நடைபெறுவதானது நமது சமூகத்திற்கே இழிவு என்று சொல்லாமலிருக்க முடியவில்லை.

சாஸ்திரங்களில் இருக்கிறது, அதற்கு நாம் என்ன செய்வது என்று சிலர் சொல்லலாம், ''வெகு காலமாய் வழக்கத்தில் வந்துவிட்டது, அதற்கு என்ன செய்வது'' என்று சிலர் சொல்லலாம், இதெல்லாம் முட்டாளதனமான சமாதானமேயல்லாமல் அறிவுள்ள சமாதாமாகாது.

நம்முடைய சாஸ்திரத்தில் இல்லாத அயோக்கியத்தனம் உலகத்தில் ஒன்றுகூட இல்லை என்று மெய்ப்பிக்கலாம், அதையெல்லாம் இன்றையதினம் நாம் செய்வதென்றால் நம்மைப்போல் மூடர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது.

அந்த சாஸ்திரங்களை எழுதியவர்கள் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இப்படி எல்லாம் எழுதினார்கள்? இம்மாதிரி வேறு தேசத்தில், வேறு மதத்தில், வேறு சாஸ்திரத்தில் எங்கயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்து பிறகு இவற்றை கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்கு தொழில் வேண்டும், வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை எழுதிவைத்து நமக்கு காட்டினால் அதுவே நமக்கு கடவுள் வாக்காகி விடுமா அல்லது ஆதாரமாகிவிடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது? இப்பொழுது வர வர அநேக கோயில்களில் இந்த தாசி வழக்கத்தை எடுத்தாகிவிட்டது.

உதாரணமாக, மைசூர் கவர்மெண்ட் தங்கள் ஆட்சிகுட்பட்ட கோயில்களுக்கு எங்கும் தாசி உத்தியோகம் இருக்க கூடாது என்பதாக ஒரு உத்தரவு போட்டு தங்கள் சாமிகளை விபச்சாத்தனத்தில் இருந்து மீட்டுவிட்டார்கள், அந்தந மூலம் அந்த சமஸ்தானத்து கோயில் தாசிகள் நீக்கப்பட்டாகிவிட்டது.

மைசூர் சமஸ்தானத்து சுவாமிகளுக்கு வெட்கம் வந்து தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்த கவெர்மெண்டுக்கு சொல்லிவிட்டதுபோல் நமது நாட்டு சுவாமிகளுக்கு என்றைக்காவது வெட்கம் வந்தோ அல்லது கிழப்பருவம் வந்தோ, இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போர்டாரிடமாவது சொல்லிவிடக் கூடாதா என்பததாக நமது நாட்டு சாமிகளை கேட்டுக்கொள்கிறோம்.

**************************************


சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 04-09-1927 ல் ''குடி அரசு'' இதழில் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

நன்றி;-
பெரியார் களஞ்சியம் - பக்கம்- 6,7,8,9
பெரியார் களஞ்சியம் தொகுப்பாசிரியர் - கீ. வீரமணி

எழுதியவர் : தந்தை பெரியார். (2-Jul-13, 11:00 am)
பார்வை : 63

மேலே