தமிழனுக்கு கடவுள் உண்டா?

உலகத்தில் மற்ற மதக்காரர்களுடைய கடவுள்களைப் பற்றி கவனித்துப் பார்த்தாலும், இவ்வளவு ஆபாசமாக இல்லாவிட்டாலும், யுக்திக்கோ, வாதத்திற்கோ நிற்க முடியாமல் அவைகளும் பெரிதும் பரிகசிக்கத்தக்கதாய் தானிருக்கின்றது.

உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளை பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தானிருக்கின்றன.

உதராணமாக, இந்து மதத்தில் உலக சிருஷ்டிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது, கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்துகொண்டு அதில் ஒரு விதையை போட்டார், அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி, அவ்வுலகத்திலிருந்து பிரம்மாவை சிருஷ்டித்து, அந்த பிரம்மா அந்த உலகத்தை இரண்டாக்கி, ஒன்று சுவர்க்கமாகவும் மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்சபூதங்களை உண்டாக்கி, பிறகு மனிதர், மிருகம், பட்சி ,முதலிய ஜாதிகளை சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல் அடுக்கடுக்காக எப்படி சொல்லிக்கொண்டே போகிறதோ, அதுபோலவே தான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும் கடவுள் முதல் நாள் ஒன்று சிருஷ்டித்தார், இரண்டாவது நாள் மற்றொன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றை சிருஷ்டித்தார் என்பதுபோலவே சொல்லிக்கொண்டே போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டி பற்றி சொல்லுகிற சங்கதி எல்லா மதத்திலும் ஒன்று போலவே தானிருக்கின்றன.

இவை ஏன் இப்படி இருக்கின்றன என்று பார்ப்போமானால், கடவுள் உண்டு என்பதற்கு சமாதானம் சொல்லும்போது, உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, அதற்காக கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவைகள் என்பதை முதலில் இன்னதை உண்டாக்கினார் என்பதாக சில மதங்களும், இரண்டாவது நாள் இன்னதை உண்டாக்கினார் என்பதாக சில மதமும் சொல்லுகின்றன, ஆகவே , இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்று போலவேதான் இருக்கின்றன, இதில் ஏதாவது தரகாறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுள்களுக்கும் ஒரே கதிதான் நேரும்.

கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்று பார்ப்போமேயானால், முதன் முதலாக ''ஆரிய மதத்திலிருந்து'' சீர்திருத்தமாக கிருஸ்துவ மதமேற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகம்மதிய மதமேற்பட்டதும் நமக்கு காணபபடுகின்றபடியால், எல்லா மதமும் அதையே பின்பற்றி கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றேத் தோன்றுகிறது.

ஆனால், நாம் ஒரு தமிழர் என்ற முறையில் கடவுள் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்வோமானால், ''கடவுள்'' என்கின்ற பதமே கட + உள் = கடவுள், என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர, வடமொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பதை போன்று பகவான், காட், அல்லா என்பது போன்ற ஒரு தனி வார்த்தையோ அல்லது அந்த விவாதங்களான அர்த்தத்தை கற்பிக்ககூடிய வாக்கியமோ, தமிழில் இல்லை என்பதை உணர வேண்டும், தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் ''கடவுள்'' உணர்ச்சி இருந்து இருந்தால் அதற்கு ஒரு தனி வார்த்தை நிச்சயம் இருந்திருக்கும்.

அது மாத்திரமல்ல, ஆங்கிலம் முதலிய பாஷைகளில் ''கடவுள் இல்லை'' என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம், 'எத்தீஸ்ட்', நாஸ்திகம், 'நாஸ்திகன்', என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றதோ அதை போலவே தமிழிலும் ''கடவுள் இல்லை'' என்று சொல்கிறவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்க வேண்டும், ''ஆனால் இல்லை'', ஆகவே, இவைகளிலிருந்தே தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கும்) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது ஒருவாறு புலப்படுகிறது.

இறைவன் என்கின்ற பதத்தை கடவுளுக்கு உள்ள தமிழ்ப் பதம் என்று பண்டிதர்கள் சொல்லக்கூடுமேயானால்அது அரசனுக்கும், தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர, கடவுளுக்காக ஏற்பட்ட தனிப் பொருளமைந்த சொல் அல்லவென்றே சொல்லுவோம்.

ஆனால், ''கடவுள்'' என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன், பெரியவன் எனினும் பொருந்தும் என்று சப்புக் கட்டலாமே ஒழிய அது அதற்கே ஏற்பட்ட தனி வார்த்தை ஆகாது.

தமிழ் நாட்டில் பலர் காலம் சென்ற பித்ருக்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களை கீர்த்தியாலும் வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக்கிறேன், மற்றபடி இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிரம்மன், பிள்ளையார், சுப்பிரமணி முதலிய கடவுள்களையே மற்றும் அது சம்பந்தமான குட்டி குட்டி கடவுள்களையோ, தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி வந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குகூட இடமில்லை என்றே கருதுகிறேன்.

இதற்கெனக்கு தோன்றும் ஆதாரம் என்னவென்றால், இப்போது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட ''நீச்சக் கடவுள்கள்'' தவிர மற்ற ''கடவுள்கள்'' பெயர்கள் எல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமானதாகும்.

ஆனால், வடமொழி பெயருள்ள சில ''கடவுள்களின்'' பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்த கடவுள்களை தமிழில் அழைப்பதை பார்க்கின்றோம், என்றாலும், இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்கு தக்க சமாதானம் சொல்லவும், ஜவாப் தரவும் யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.

இத மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வட மொழிப் பெயர்கள் உடையதாகவும், அவைகள் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேத சாஸ்திர புராண இதிகாசங்களாகவும்தான் இருக்கின்றதே அல்லாமல், தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்டதாக சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லை.

இவைகளுக்கு செய்யப்படும் பூசை முதலியவைகளும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி, வடமொழி பெயர்கள் கொண்ட வஸ்துகளும் செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம், அதாவது அர்ச்சனை, அபிஷேகம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவைகளாகும்.

தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள், முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட்டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண்டகம், பிரபந்தம் முதலியவைகள் பாடினதும், மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும், ஆகிய எல்லாம் வடமொழிப் பேர்கொண்ட கடவுள்களைப்பற்றியும், அவர்களது செய்கைகளைப் பற்றியும் சொல்லப்பட்ட வழ்டமொழிப் புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றனவே அல்லாமல் மற்றப்படி அவைகள் தமிழர்களோ அல்லது தமிழ் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத்தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக்கையுமே நான் பார்த்ததும் இல்லை, பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும், சமயக்குரிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள் கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம்.

வேண்டுமானால் அதை தமிழில் - விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக்கொள்கிறோம், ஆனாலும், அது சரியான மொழிபெயர்ப்பு அல்ல என்று சொல்வதோடு, விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்த கருத்துடன் சொல்லப்படுகின்றனவோ அந்த கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.

விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்த பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மாற்று பெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னாள் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றேத் தோன்றுகிறது.

ஆகவே, தமிழில் காட், அல்லா, பகவான் என்பவைகளைக் குறிப்பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவதற்கு தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத்திலுள்ள கடவுள்களும், பெயர்களும் அவற்றின் நடவடிக்கைகளும்கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப்பவைகள் எல்லாம் வடமொழியில் இருந்து தமிழர்கள் எடுத்துகொண்டு தங்கள் உடையனவாகக்கிக்கொண்ட மயக்கமே என்றும் எனக்குப் பட்டதை உங்களுக்கு சொல்லுகிறேன்.


***********************************

கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜ ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை முடிவுரை.

தலைப்பு - தமிழனுக்கு கடவுள் உண்டா?
குடி அரசு - 29-09-1930

நன்றி;-
பெரியார் களஞ்சியம், பக்கம்- 63,64,65,66,67.
பெரியார் களஞ்சியத்தை தொகுத்து வெளியிட்டவர் கீ. வீரமணி.

எழுதியவர் : தந்தை பெரியார். (6-Jul-13, 11:43 am)
பார்வை : 115

மேலே