கவிதைக்கு அவள் என்று பெயர்...!

ஒரு மழை பெய்யவும் பெய்யாமலிருக்கவும் சாத்தியமாயிருந்த விடுமுறை நாளின் மதிய மூன்றரை மணிக்கு புரண்டு படுக்கையில் கம்பளிக்குள் இருந்து அரைத் தூக்கத்தில் பார்த்த போது கையில் தேனீரை வைத்துக் கொண்டு

"ஆவி பறக்கும் டீ......" என்று அவள் பயமுறுத்த தொடங்கி இருந்தாள்...

ச்ச்ச்சிம்னி அப்டித்தான்....எப்போதும்! விளையாட்டாய் என்னை காதலித்து விளையாட்டாய் கைப் பிடித்து விளையாட்டாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள்...! என்னாச்சு...இப்பவே டீ...போட்டுக் கொண்டு வந்துட்ட என்று நான் சோம்பல் முறித்து எழ எத்தனிக்கையில் டீயை பக்கத்து மேசையில் வைத்து விட்டு சரியாய் என் மேல் வந்து சாய்ந்தவளை ஓ......எழுந்திரு ச்ச்ச்சிம்னி என்று தடுக்க முயன்றதை பார்த்து விட்டு...

என்ன...? என் வெயிட் தாங்க முடியலையா......உதடு சுளித்து பொய்யான கோபத்தை கண்களில் கொண்டு வந்து என் முகவாயை தூக்கி முத்தமிட நெருங்கி வந்தவள் சட்டென்று ரூட்டை மாற்றி முன் நெற்றியில் முத்தமிட்டு கேசம் கலைத்து....பப்பு கண்ணா....வீ நீட் டூ கோ ஃபார் எ வாக்....அதுவும் வெளில மழை வர மாதிரி இருக்கு தூறல் போட ஆரம்பிக்கப் போகுது... வீ கோ........நவ் நவ்வ்.....நவ்...தைய தக்கா தைய தக்கா என்று குதிக்க ஆரம்பித்திருந்தாள்..

கண்ணாடி ஜன்னலின் வழியே திரண்டிருந்த கருமேகங்களும் சுற்றி சுற்றி அடிக்கும் காற்றும்.... மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடும் பெண்களைப் போல தலையை ஆட்டி ஆட்டி ஆடிக்கொண்டிருந்த மரங்களும் என்று இயற்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தது.

ஜன்னலைப் பார்த்தபடி...தலைக்கு ஒரு கையைக் கொடுத்து மறுகையால் அவளின் இடுப்பை வளைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தவனின் மூக்கைப் பிடித்து சடாரென்று திருகி...இடியட்.......நான் என்ன சொல்றேன்....நீ என்ன பண்ணிட்டு இருக்க..என்று என் செல்லப் பிசாசு இம்சித்தது. இருடி....மொதல்ல நீ கைய எடு லூசு, என்ற படி எழுந்து நின்று கிவ் மி டூ செகண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்து முகம் கழுவி தலைக்கு தண்ணீர் விட்டு கைகளால் படிய வாரிய படி வெளியே வந்து...

ப்ளூ கலர் ஜெர்கினுக்குள் நுழைந்து, பிளாக் கலர் ட்ராக் பேண்ட் உடுத்தி, கேன்வாஸோடு வாசலில் நின்று....ஏண்டி எருமை எவ்ளோ நேரம் வெயிட் பண்றது நீ வர்றியா...?இல்லை நான் போட்டா..என்று போட்ட கூச்சலில் லபோ ...திபோ என்று ஓடி வந்து வாசல் கதவு அருகே நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தது என் கவிதை.....! அவள் மூச்சிறைத்துக் கொண்டிருக்க என் புத்தி ஏதோ குறுக்கு நெடுக்காக ஓடி வேறு திட்டம் தீட்டியது...

ச்ச்சிம்னிமா..'நாம வேணும்னா இன்னொரு நாளைக்கு போலாமாடா வாக்' என்று கை தூக்கி சோம்பல் முறிக்கையில்...அது எல்லாம் ஒண்ணும் வேணாம்.. உங்க புத்தி எல்லாம் எனக்கு தெரியும்...லெட்ஸ் கோ நவ் ஒன்லி...கதவு மூடி பூட்டி விட்டு... என் முதுகைத் திருப்பி போ...போ......போடா.என்று முன்னால் தள்ளினாள்...

அந்த எஸ்டேட்டுக்கு நான் மாற்றாலாகி வந்து 6 மாதங்கள் ஆகி விட்டது. தேநீர் தூள் தயாரிக்கும் ஒரு பிரத்தியோக தென்னிந்திய கம்பெனியின் எச்.ஆர் உத்தியோகத்தின் சுமையை துளியேனும் தலைக்கு ஏற்றி டென்சன் ஆக்காமல் இந்த இயற்கையும், மலைகளும், ஆரவாரமான பள்ளத்தாக்குகளும் என்னை ப்ரஷ்ஷாகாத்தான் வைத்திருக்கின்றன.. பத்தாக்குறைக்கு என் ச்செல்ல ச்ச்சிம்னி என்னும் ஷர்மிலி....

வெறுமனே அவளைச் சிம்னி என்று கூப்பிடமாட்டேன் "சி" க்கு முன்னால் ஒரு இரண்டு மூன்று ச்ச்ச்சை அழுத்தி சேர்த்து ச்ச்ச்சிம்னி என்று கூப்பிடும் போது காதலை அழுத்தமாய் வார்த்தைகளில் அடிக்கடி அவளுக்கு என்னால் பரிமாற முடிந்தது. ச்ச்ச்மினி ஒரு சர்வாதிகாரி. ஆமாம்...காதல் சர்வாதிகாரி. அவள் சொன்னாள் மறு பேச்சில்லை...

கவனமாய் என் ஆசைகளை கண்டு கொண்டு அதை சரியாய் நிறைவேற்றியும், அபிலாசைகளை அடக்கியும் வழிநடத்தும் கெட்டிக்காரி. என் கவிதைகளால் எப்போதும் அர்ச்சனைகள் செய்வேன், அவள் புன்னகையால் எனக்கு அருள் பாலிப்பாள். அருள் பாலித்த மூன்றாவது நொடியில் பிரபஞ்ச ரகசியத்தின் மூலத்தை நோக்கி மெல்ல மெல்ல பயணிப்போம். மூர்ச்சையாகும் அளவு நடக்கும் யுத்ததில் பக்தி எல்லாம் உடைந்து போய் மூலாதாரம் விழித்துக் கொண்டு முதுகுத் தண்டின் வழியே மெல்ல மெல்ல பயணித்து சகஸ்கரம் தொட முயன்று ஞான மார்க்கத்துக்குள் மெல்ல நுழைவோம்....!

மூலாதாரம் தாண்டி சுவாதிஷ்டனம் கடந்து மணிப்பூரகம் தொடும் முன்பு பல முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். பக்தியாய் தொடங்கும் காமம் ஒரு கட்டத்தில் அதைக் கடந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கத்தான் செய்தது....

'என்னா சார் எங்க போய்ட்டீங்க....? என் கூடத்தானே நடந்து வர்றீங்க'....ச்ச்ச்சிமினி என்னை உலுக்கினாள்....ஹி ஹி ஒண்ணும் இல்லை ச்ச்சிம்னி ச்ச்சும்மா என்றேன்...! சரியான சாமியார்டா... நீ, டக்கு டக்குன்னு வேற எங்கயும் போய்டாத.. இப்போ..இங்க இந்த நிமிசத்துல இரு...

சாரலாய் மெலிதாய் தூறல் போட ஆரம்பிக்க அவள் துள்ளிக் குதித்தபடி என் கைகளைக் கட்டிக் கொண்டு எனக்கு நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள்..! ஏண்டா... இந்த மலை மேல இருக்க மரம் எல்லாம் காலம் பூரா வானத்தை பார்த்துகிட்டு மழையில நனைஞ்சுகிட்டு எவ்ளோ சந்தோசமா இருக்கு பாத்தியா...?!!!

கட்டுப்பாடுகள் இல்லை கேள்வி கேப்பாடு இல்லை.. இயற்கையான ஒரு விதியை தனக்குள்ள மெளனமா சுமந்துகிட்டு..தன்னால வாழுதுங்க.....பேச்சிலர் ஆஃப் ஆர்ட் இன் இன்டிரியர் டெக்னாலஜி படித்தவள் தத்துவம் பேசிக் கொண்டிருந்தாள்...

உனக்கு ஏன் ச்ச்ச்சிம்னி ரொம்பவே லோன் லினெஸ்சும்.. இந்த மாதிரி இயற்கையும் பிடிச்சு இருக்கு...இன்பேக்ட் சிட்டில வளர்ந்த பொண்ணு எப்டி என் கூட அட்ஜஸ்ட் பண்ணி இருப்பன்னு நான் உன்னை கூட்டிட்டு வரும் போது ரொம்பவே யோசிச்சு இருக்கேண்டி...பிக்காஸ்..இட்ஸ் டிப்பிகல்ட் டு கோ வித் மீ.....என்றேன்...!

அட லூசு புருஷா... சிட்டில வளர்ந்தா என்ன.. ? கிராமத்துல வளர்ந்தா என்ன...? ஆணா இருந்தா என்ன...? பெண்ணா இருந்தா என்ன? உள்ளுக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசைகள், ஒவ்வொரு கனவுகள்...

நான் கனவு கண்டேன்...
நீ வர்ணம் பூசினாய்...

சொல்லிவிட்டு எப்டி நம்ம கவிதை..? என்று அவள் ஸ்வெட்டரின் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்...! நீ யாரு...இன்னொரு கவிதை சொல்லு ச்ச்ச்சிம்னி என்றேன் கெஞ்சலாய்...! ஏய்....என்ன விளையாடுறியா...பிச்சு புடுவேன் படுவா....நான் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிடா....நீதான் என் கம்பன்...நீ சொல்லு ஏதாச்சும்...! என்னை சும்மா சீண்டாத......,அவள் சிணுங்கலாய் ஒரு கவிதையைப் பிரசவித்து விட்டு.....

ஒன்றும் தெரியாதது போல, என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளி சீராக எனக்கு சரியாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்..!

நான் கவிதை சொல்வேன் என்று அவள் அமைதியாகி இருந்தாள். என் எல்லா நகர்வுகளையும் மூர்க்கமாய் ரசிப்பவள் அவள்...அவளின் ரசனைக்காகவென்றே நான் படைப்பாளியாய் இருக்க ப்ரியமாயிருந்தேன். ரசனைகளின் உச்சங்கள் கொடுக்கும் போதையில்தான் ஒரு படைப்பாளியின் நகர்வு எப்போதும் இருக்கிறது. அவள் ரசிக்கிறாள்...நான் அவளுக்காய் படைக்கிறேன்...!

அந்த சூழல் எனக்குள் கிறக்கத்தை அதிகமாக்கி இருந்தது. மழை பெய்யாமலும் பெய்தும் ஒரு மாதிரி விளையாடிக் கொண்டு இருந்ததும், அத்தனை சரிவாக இல்லாத சிறு ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்த மலைப்பாதையும், சுற்றி இருந்த தேயிலைத் தோட்டங்களும், கண்ணுக் கெட்டிய தூரம் வரைப் பரவிக் கிடக்கும் பசுமையும்.....,சுழன்று சுழன்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்களும் என்று....நான் மொத்தமாய் தொலைந்து போய்தான் நடந்து கொண்டிருந்தேன்..

டக்.. டக்.. டக்.. டக்.. டக்.............

மெளனத்தை இருவருமே போர்த்திக் கொண்டிருந்தோம். எதுவுமே பேசவில்லை. அவளை நானும், என்னை அவளும், அவ்வப்போது விழிகளால் வருடிக் கொண்டோம். என் மனசு முழுதும் முழுமையான காதலில் நிரம்பிக் கிடந்தது, காதலை ஏதேனும் ஒரு சக்திதான் தூண்டி விடும்...பெரும்பாலும் அவள் காதலான மனைவி..., ஆழமான மெல்லிய பாடல், ஒரு சூழல், யாரென்றே தெரியாத முகம் தெரியாத சில பெண்கள் என்று பலவும்....காதலின் கிரியா ஊக்கியாய் இருக்கலாம்..

காதலிப்பதும் பெரும் சுகம் என்றால் காதலிக்கப்படுவது அதை விட பெரும் சுகம். அந்த ஒரு குறிப்பிட்ட தினத்தில் இயற்கையையும், என் வழித்துணையாய் வந்த வாழ்க்கை துணையையும் நான் தீரத் தீர காதலித்து காதலில் கிறங்கிக் கிடந்தேன்...பதிலுக்கு அவளும், சுற்றியிருந்த ரம்யமான சூழலும் என்னை மூர்ச்சை கொள்ளும் அளவு காதலித்துக் கொண்டிருக்க..நான் வார்த்தைகள் கடந்த, உணர்வுகள் கடந்த, மனம் கடந்த ஒரு சமாதியில்....நானே நானாய், நானே மழையாய், நானே, மரமாய், நானே மேகமாய் நானே....என் மனைவியாய்....ஒரே நேரத்தில் எல்லாமாய் உணர்ந்து ஊறிக் கிடந்தேன்...

மறுபடியும் மூலாதாரம் விழிக்க..., சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று சக்தி மேலே எழ ஆரம்பிக்க மூச்சு மெல்ல சீராக.....அனாதகத்தை தொடப் போகும் முன்பு....

யூ இடியட்....!!!! நான் உன்னை கவிதை சொல்ல சொன்னேன்டாஆஆஆஆ........!!!!! .ஸ்டுப்பிட்....என்று லெளகீகம் என் வயிற்றில் குத்தியது....அடிக்கத் துரத்தியது....ஓ.....சாரி, சாரி..... சாரிடி.....நான் சொல்றேன்....சொல்றேன்....சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தேன்....அவள் துரத்தினாள்....

பாதை ஓரம் கிடந்த ஒரு சிறு பாறையில் மூச்சிறைக்க அமர்ந்தேன்...., என் முன் வந்து மறுபடியும் அவள் மூச்சிறைத்தாள்...கண்ணடித்து வீட்டுக்கு போலாமா என்றேன்......! ஹி ஹி.. வீட்டுக்குத்தானே போகணும் சார்.... பின்ன என்ன காட்டுக்கா போகப் போறோம்....? என்று சொல்லி விட்டு ஹா.. ஹா என்றாள்..., ஜோக்கடித்து விட்டாளாம்...

காகிதத்தில் கவிதை செய்து, செய்து...
நான் களைத்தே போய்விட்டேன்....,
என் உதடுகளில் தேக்கி வைத்திருக்கிறேன்
ஓராயிரம் கவிதைகளை...
எங்கே உன் முன் நெற்றி காட்டு,
நாசி காட்டு, கன்னம் காட்டு, கழுத்து காட்டு
உதடுகளைக் காட்டு.....

என்று நான் கவிதையென்று ஒன்றை சொல்ல....ச்ச்சீ படுவா உதை படுவ.. என்று என் நெஞ்சு பிடித்து தள்ளி மிருதுவாய் சாய்ந்தாள்....! சரி வா வீட்டுக்கு போகலாம்....இருட்டிடுச்சு...என்றாள். அவள் சொன்னதையே நான் வேகமாய் அழுத்தி திருப்பிச் சொன்னேன்....முறைத்தாள்.....!

மெல்ல கை கோர்த்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு மெல்ல வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்....

நல்ல வேளை மழை வரலேல்ல........என்றவள் வீடு நெருங்கியதும்...ஆமா நைட் உனக்கு என்ன டின்னர் வேணும்டா.....? இட்லி, தோசை , சப்பாத்தி, சாதம்.....என்று பட்டியலிட்டு பதிலுக்காய் என்னைப் பார்த்தாள்....

நான் " நீ " என்றேன்...எங்கோ பார்த்தபடி....,

யூ டாமிட்.....நீ பட்னிதான் இன்னிக்கு.....அவள் பேசிக் கொண்டே வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்...

நான் வாசற்படியில் அமர்ந்து வானம் பார்த்தேன்....நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன....

" பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்சத்திரங்களடி "

பாரதி மூளைக்குள் ஏறி மீசை அமர்ந்து முறுக்கிக் கொண்டிருந்தான்.....நேரம் போனதே தெரியவில்லை....மறுபடியும் மூலாதாரம், சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று நகர ஆரம்பித்து இருந்தேன்...

உள்ளேயிருந்து என் ச்ச்ச்சிம்னி கூப்பிட்டாள்......." சாப்பாடு ரெடி வாங்க........."

அனாதகம் தொடும் முன் வழுக்கி விழுந்த படி எழுந்தேன்....இதோ வந்துட்டேன்மா......!

வீட்டுக்குள் சென்று விட்டேன்....!

எழுதியவர் : Dheva.S (15-Jul-13, 7:28 pm)
பார்வை : 298

மேலே