...எனப்படுவது யாதெனின் !

பொருளை உணர்த்தும் - ஆனால்
பொருளாய் நம் முன்னால் நிற்காது

மொத்தமாய் நனைக்கும் - ஆனால்
மழையாய் வந்து கொட்டித் தீர்த்திடாது

அலைகளைப் பரவவிடும் - ஆனால்
கடலைக் கண்ணிற்குக் காட்டாது

விருந்திற்கு அழைக்கும் -
மறந்தும் முகவரியை வழங்காது

பல சுவையைக் கொடுக்கும் -
படையலின் பெயர் சொல்லி விளக்காது

மணத்தால் உணர்த்தும் -
மலர் இனத்தை முன் மொழிந்திடாது

மலையாய் மலைக்கும் -
மலையென எதிரில் தோன்றாது

பயணத்தை சுகமாக்கும் -
ஆரம்பித்ததும் பாதையை முடிக்காது

வானம் சென்று களிப்பூட்டும் -
பற்ற வைத்ததும் வெடித்துச் சிதறாது

விரிவான செய்தியாய் வளரும் -
தலைப்புச் செய்தியைக்கூடச் சொல்லாது

மூழ்கியபின் முத்தைக் கொடுக்கும் _
சிப்பி போல் எங்கும் சிதறிக் கிடக்காது

உச்சத்தில் சொக்க வைக்கும் - ஆனால்
ஆரம்பித்ததுமே ஒரு புரிதலையும் தந்திடாது !

கவிதை !!

எழுதியவர் : RATHINA (5-Sep-13, 1:37 pm)
பார்வை : 134

மேலே