நமது கிராமத்திலிருந்து உலகம் போற்றும் மாமனிதர்கள் உருவாக சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று பார்த்தோமானால்...

நமது கிராமத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்கள்
ஜனனம் செய்து மறைந்து விட்டார்கள்.தற்சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்.இந்திய தேசத்திற்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள்.ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.கலை அறிவியல் படிப்பு,மருத்துவ படிப்பு, பொறியியல் படிப்பு என்று படித்து முடித்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் பேர்.நமது வயிற்றுப் பசியை போக்க உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் ஏழை,பணக்கார விவசாயிகள் உள்ளார்கள்.காலம் காலமாக உழைக்கும் ஏழை கூலித் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.இப்படி
பல தரப்பட்ட மனிதர்கள் நமது கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - குறள்

ஆனால்,நமது கிராமத்திலிருந்து தேசம் போற்றும் இலக்கிய,வரலாற்று மேடைப் பேச்சாளர்கள் உருவாகவில்லை.சுதந்திர போராட்ட காலத்தில்,
சுதந்திர வேள்வியில் தம்மை அர்பணித்தவர்கள் யாரும் இல்லை.வாழ்ந்தால் இவரைப் போன்று மகத்தான உலகம் போற்றும் மனிதனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்று சொல்லும்படியாக,நமது கிராமத்தில் எவரும் தோன்றி மறையவில்லை. சுயநலவாதிகளாக,தமது குடும்பநலன் ஒன்றிற் காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் ஏராளம் பேர்.

நமது கிராமத்திலிருந்து அரசியல் இயக்கத்தில் அரசியல்வாதிகளாக முத்திரை பதித்தவர்கள், மக்களை வழி நடத்திச் செல்லும் தலைவர் களாகவோ,சிறந்த மேடை பேச்சளார்களாகவோ எவரொருவரும் பிரகாசிக்கவில்லை.எந்த ஒரு
அரசியல் இயக்கத்தின் பத்திரிகைகளையும் நமது கிராமத்து மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள். தினந்தோறும் தினசரி பத்திரிகைகளை படிப்பவர்கள் மிகச் சிலரே.

முன்பெல்லாம் நான் பள்ளி இறுதி படிப்பு படித்து முடிக்கும் வரை நமது ஊரில் நூலகம் கிடையாது. ஆனால்,கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழக அரசால் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும்,தரமான இலக்கியம்,வரலாறு,தன்னம்பிக்கை நூல்கள்,வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் என்று
ஏராளமாக உள்ளன.ஆனால்,பெரும்பாலனவர்கள் படிப்பதற்கு தாயராக இல்லை.முக்கியமாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக சென்று படிப்பதில்லை என்பது கவலைக்குரிய விசயம். சிறுவயதில் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

என் மனதில் அடிக்கடி சில கேள்விகள் தோன்றிய வண்ணம் இருக்கும்.நாம் எதற்காக கல்வி கற்கிறோம்?நம்முடைய மரணம் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்தி சொல்லுமா?நம்மால் இந்த பூமியில் வாழ்ந்ததற்குண்டான
அடையாளத்தை விட்டு செல்ல முடியுமா?எதிர்கால சந்ததியினர் நாம் வாழ்ந்த வாழ்வு குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் என்று அடிக்கடி சில கேள்விகள் எண்ண அலைகளாக மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

கல்வி கற்பதால் நம்முடைய குடும்பத்தின் பொருளாதார மேன்மையை உயர்த்திக் கொள்வதாக இருக்க வேண்டும்.மனித சமுதாயம் தழைத்தோங்குவதற்கு கற்ற கல்வி பயன்பட வேண்டும்.ஆனால்,நாம் கற்ற கல்வி நம்முடைய குடும்பத்தின் பொருளாதார உயர்வுக்கும்,வளமான வாழ்க்கைக்கு என்று மட்டுமே இருந்தால், கற்றவர்கள் ஒவ்வொருவரும் நம்முடைய
தேசத்தை கைவிட்டவர்களாகவே ஆகிவிடுவோம்.இப்போதெல்லாம் படித்த
இளைஞர்களுக்கு பணம் சம்பாதிப்பது என்பது இமாலய குறிக்கோளாக இருக்கிறது.தன் குடும்பம்,தன் குழந்தைகள்,தன் உறவினர்கள் என்பதை தவிர்த்து,அவர்களால் வேறு எதையும் சிந்தித்து பார்க்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.ஏனெனில் நமது கிராமத்திலிருந்து மகத்தான உலகம் போற்றும் மனிதர்கள் யாரும் தோன்றி மறையவில்லை.
இப்போது இருப்பவர்களால் மகத்தான காரியங்கள் எதுவும் முடியவில்லை.

பாரதமே விழித்தெழு!!

நமது இந்திய தேசத்தின் தேசிய குணமாக மக்களிடம் மற்றவர்களின் வாழ்வாதார வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் "பொறாமை" என்னும் கீழ்த்தரமான குணம் மேலோங்கி காணப்படுகிறது.எவரொருவரும் தன்னை விட ஒரு படி மேலே உயர்ந்துவிட்டால்,
அவர்களைப் பற்றி குறை சொல்வதற்கு தயாராக இருக்கும் மனிதர்களை நிறையவே பார்க்க முடிகிறது.இது ஒரு தீய குணமாக புற்றுநோயைப் போல் பரவி வளர்ந்துகொண்டிருக்கிறது.


சுவாமி.விவேகானந்தர் அவர்கள் தன்னுடைய சீடர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து எழுதிய கடித்ததில் குறிப்பிடுகிறார்-அந்தக் காலத்திலேயே நம் தேச மக்களிடம் இத்தகைய தீய குணங்கள் மேலோங்கி காணப்பட்டதாக எழுதி இருக்கிறார். "கடிதங்கள்" என்ற ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் துறவு பூண்டு பதினான்கு வருடங்களுக்கு மேல் இந்திய தேசமெங்கும் அலையும் துறவியாக மக்களை சந்தித்து பேசியதில் நிறைய குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை பார்த்திருக்கிறார். தரித்திரியம் பிடித்த,பிச்சைக்கார புத்தியுடைய, பொறாமை கொண்டு மற்றவர்களை அவதூறு பேசும் மனிதர்களைத்தான் அதிகம் சந்தித்தாக தன்னுடைய கடிதங்களில் பதிவு செய்திருக் கிறார்.ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாக வாழ்ந்ததின் பிரதிபலிப்பாக இந்த குணாதிசயங்கள் மக்களிடம் மாறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.சுவாமிஜி அவர்கள் தேசாந்திரியாக கிராமங்களில் மக்களிடம் பேசச் செல்கையில்,பேச்சை கேட்டுவிட்டு ஒரு பிடி சோறு கூட போடாமல் சென்றவர்கள் ஏராளம் பேர்.ஆனால்,மேலை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இதற்கு நேர்மாறாக,அவருடைய சொற்பொழிவின் ஆற்றலைக் கண்டு வியந்து போய் தம்முடைய குடும்ப உறுப்பினராகவே பாவித்து,அளப்பரிய பொருளாதார உதவிகள் செய்தவர்கள் ஆயிரக்கணக்கான பேர்கள்.


கால்டுவெல் ஒருவரிடம் எல்லையற்ற திறமைகள் இருப்பது தெரிந்தால்,மேலை நாட்டினர் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வாரி வழங்கு வதற்கு தயாராக இருப்பார்கள்.திறமை வாய்ந்த மனிதர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடுத்து,தங்கள் நாட்டில் சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்பார்கள்.அதனால்தான் ஒரு காலத்தில் உலகையே தன் காலடியில் வீழ்த்தி,ஆட்சி புரிந்தார்கள்.ஐரோப்பிய தேசத்தை சேர்ந்த கால்டுவெல் என்பவர் "திருநெல்வேலி சரித்திரம்" என்ற உலகப் புகழ்பெற்ற வரலாற்று ஆவண நூலையும்,திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலையும் எழுதினார். மேலை நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் தமிழ் மொழி உயர்வு பெற தம் வாழ்வையே அர்பணித்தார்.இது போன்று தமிழுக்கு தொண்டாற்றிய கிருஸ்துவ பாதிரிமார்கள் நிறைய பேர்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த தமிழறிஞர் நொபுரூ சுராஷிமா அவர்கள்,தமிழுக்கு தொண்டு செய்ததற்காக 2012 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை இந்திய அரசாங்கம் வழங்கி கவுரவித்தது.1995 ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது,தஞ்சாவூரில் எட்டாவது உலக தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர்.சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராக
பணியாற்றிய காலத்தில் இந்த மாநாட்டை நடத்தினார்.தமிழக கல்வெட்டு களையும், தமிழினத்தின் வரலாறு தொடர்பான நிறைய நூல்களை படித்து,தமிழ் மொழியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.இவை
கல்வெட்டு தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு இன்றளவும் உதவியாக உள்ளன.இப்படியாக மேலை நாடுகளிலிருந்து தேச எல்லைகளை கடந்து நம் தேசத்தின் மொழிக்கும்,கலாச்சாரத்திற்க்கும் பெருமை சேர்த்தவர்கள் நிறைய பேர்.

ஆனால்,தமிழ்நாட்டில் கல்லூரிகளில் தமிழ் துறையை தேர்ந்தெடுத்து முதுகலை,ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்களின் நிலைமை மிக மோசமானாதாக உள்ளது.சுயநிதிக் கல்லூரி களிலோ,தனியார் பள்ளிகளிலோ பேராசியர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைப்பதில்லை.அரசு பணிகளில் சேர்ந்தால் மட்டுமே அவர்களால் தங்களது பொருளாதார நிலைமையை பூர்த்தி செய்து கொள்ளமுடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்திலுள்ளவர்களால் எப்படி தமிழ்மொழியை வளர்க்க முடியும்.பிற துறையை சேர்ந்தவர்கள் வேண்டுமானால் பல தமிழ் நூல்களை படித்து,எழுத்துக்கும்,மொழிக்கும் பெருமை சேர்க்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.அப்படி பெருமை சேர்த்தவர்களில் சுஜாதா, பொன்னீலன், அகிலன், கல்கி,அப்துல் கலாம்,எஸ்.ராமகிருஷ்ணன்,
ஜெயமோகன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.பள்ளி படிப்பையே முடிக்காதவர்களான-கவிஞர்.கண்ணதாசன்,கலைஞர்.கருணாநிதி,
கவிஞர்.வாலி,ஜெயகாந்தன்,புதுமைபித்தன்,கி.ராஜநாராயணன் போன்றவர்கள் எழுத்துலகிலும்,திரை உலகிலும் சகாப்தம் படைத்தவர்கள்.


நான் கணிப்பொறி அறிவியலில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவன்.என்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே தமிழ்மொழியை என் ரத்தத்தில் ஜீவநதியாக பாயவிட்டு,இன்றுவரைக்கும் தமிழ்மொழியை உயிர்மூச்சாக சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னால் இயன்ற அளவுக்கு நான் வாழும் சமூகத்திற்காக சிறுசிறு நற்பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.இலக்கிய மேடைகளில் சிறந்த மேடை பேச்சாளனாக வரவேண்டும் என்ற இமாலய இலக்கு என் இதயத்தை அழுத்திக் கொண்டே இருக்கிறது.இன்றைய சூழ்நிலையில் நம் தேசத்தில் தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, நாடு, தேசம்,சமூகம்,சமூகப்பணி,தியாக உணர்வு,அர்பணிப்பு உணர்வு போன்ற
வார்த்தைகளெல்லாம் மக்களுக்கும், இளைஞர்க ளுக்கும் புதிதாகவும்,வேம்பாகவும் கசக்கிறது.இது குறித்து எவராவது பேசினால்,அவரை சுத்த பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவுக்கு மனப்பான்மை வளர்ந்து விட்டது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நிறைய படிப்பு,கை நிறைய பணம் சம்பாதித்தல்,மாளிகை போன்ற வீடு, வாகனங்களை வாங்குதல்,நல்ல ஆடம்பரமான வாழ்க்கை.


சமுதாயத்தில் நிற்கதியற்ற,காலம் காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைக்காத,முறையான அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத ஏழை,பாமர மக்கள் குறித்து மெத்தப் படித்த இளைஞர்களுக்கு என்ன கவலை இருக்கபோகிறது?...

படித்த இளைஞர்கள் நம் தேசத்தில் வாழும் அடித்தட்டு மக்களை அனாதையாக கைவிட்டு விட்டார்கள்.நாம் வாழும் தேசத்தை புனரமைப்பதற்கு தம் வாழ்வையே அர்பணிக்க இப்போதுள்ள இளைஞர்கள் தயராக இல்லை.அவரவர்கள் வாழும் கிராமத்தின்
வளர்ச்சி குறித்து பெரும்பாலான இளைஞர்களுக்கு அக்கரையில்லாதபோது,தேசம் குறித்து பேசுவது என்பது அதிகப்படியான விசயம்தான்.

நம் பாரத தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வையே அர்பணித்து,சிறைக் கொட்டடியில் பெரும் துயரங்களை அனுபவித்த மகாத்மா.காந்தி,
ஜவகர்லால்நேரு,பெருந்தலைவர்.காமராஜர்,
வ.உ.சிதம்பரம்பிள்ளை,சர்தார்.வல்லபாய் படேல்
போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு,நான் கண்ணீர் சிந்தி அழுத பல நாட்கள் உண்டு.பேருந்தில் பயணம் செய்யும்போது, இருசக்கர வாகனத்தில் நெடும்தூரம் பயணம் செய்யும்போது,நடைபயிற்சி செய்யும்போதோ, இவர்களைப் பற்றிய நினைவுகள் வரும்போது, கண்ணீர்த்துளிகள் நெஞ்சை நனைக்கும்.அவர்கள் செய்த ஈடு இணையில்லாத,அப்பழுக்கற்ற தியாகம் பல நூற்றாண்டுகள் கடந்தும் வீண்போகாது. இவர்களின் தியாக வரலாறு நம் தேசத்தின் கோடிக்கணக்கான இளைஞர்களில்,உலகத்தின் ஆணிவேரையே அசைக்கக்கூடிய சர்வ வல்லமை படைத்த தீ ஜுவாலைகளைப் போன்ற ஒரு சில இளைஞர்களால் பாரத தேசத்தில் புதிய சகாப்தம்,வரலாறு படைக்க முடியும்.

இனி வரும் காலங்களில் தேசம் போற்றும் தலை சிறந்த மேடைப் பேச்சாளர்கள்,ஆன்மிக பேரலையால் உலகையே மூழ்கடிக்கவல்ல ஆன்மிகவாதிகள்,அகிலம் போற்றும் தேசத் தலைவர்கள்,விஞ்ஞானிகள் நமது
கிராமத்திலிருந்து உருவாக சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று வினா எழுப்பினால்,அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

My Village Blog:
Kulakattakurichi

எழுதியவர் : R Senthilkumar (9-Sep-13, 12:58 pm)
பார்வை : 797

மேலே