+ஈ!+ (அ வேளாங்கண்ணி)
அவனுக்கும் அந்த ஈக்கும் ரொம்ப நேரமா சண்டை நடந்துகிட்டு இருக்கு...
ஒவ்வொரு வாட்டியும் எப்படியோ ஏதோ பண்ணி அந்த ஈயை துரத்துவான்... மறுபடியும் வந்திடும்...
முகத்தில நல்லா அடிபட்டிருந்துச்சு... ரத்தம்கட்டி நல்ல பெரிய காயமா இருந்திச்சு... அந்த காயத்துக்குத்தான் அடிக்கடி அந்த ஈ வருது...
அவனால உடம்ப அசைக்ககூட முடியல... நல்ல வலியா இருந்துச்சு... மங்கலா தெரிஞ்ச கண்ணுலதான் ஈயை அப்பப்ப துரத்திட்டு இருந்தான்...
முதல்ல துரத்துவான்... எங்கேயோ போன மாதிரி போயிடும்... அப்படியே வலியில அசதியா தூங்கற மாதிரி படுத்திருப்பான்... போன ஈயோட சத்தம் மறுபடியும் காதுக்குள்ள கேக்க ஆரம்பிக்கும்போது திடுக்குனு முழிப்பான்... அது சரியா அதே காயத்துல போயி உக்காரும்...
நேத்துவரைக்கும் நல்லாத்தான் இருந்தான்... அவனுக்கு சொந்தம்னு சொல்லிக்கல்லாம் யாருமில்ல... ஒரு பெரிய பணக்காரங்க வீட்ல தான் அவன் வளந்தான்... அங்க எல்லோருக்குமே இவன ரொம்ப பிடிக்கும்...
அங்க இருந்த சின்ன பையன் தான் இவனோட பெஸ்ட் ப்ரண்ட். ரெண்டு பேருந்தான் எப்பவும் விளையாடிட்டே இருப்பாங்க... இவனுக்கும் அவன ரொம்ப பிடிக்கும்...
இவனுக்கு அங்க எல்லா உரிமையும் உண்டு... எங்க வேணா போலாம்... வரலாம்... அவன அப்படித்தான் பாத்துக்கிட்டாங்க... அங்க ஈயை க்கூட பார்த்திருக்கமாட்டான்... அப்படி இருந்தவனுக்கு இப்ப என்னங்க ஆச்சு...
இப்ப இங்க பாருங்க... அம்போனு கிடக்கறான்... மறுபடியும் அந்த ஈ வந்து அவனது காயத்தை சுவைக்க ஆரம்பித்தது... தலையை எப்படியோ கஷ்டப்பட்டு ஆட்டி ஈயை இம்முறை துரத்திவிட்டான்...
மீண்டும் நினைவினில் பின்னோக்கிய பயணம்... அந்த துரதிஷ்டமான நாள் நேற்று... இவனுக்கு நல்லாவே விடிந்தது...
என்றும் போல நேற்றும் காலையிலிருந்தே அந்த வீட்டு சின்னப்பையனுடன் விளையாடிக் கொண்டுதான் இருந்தான். அந்த சின்னப்பையனுக்கு நேற்று பிறந்தநாள் வேறு... வீடே ஒரே கூட்டமாய் இருந்தது... அந்தப் பையனும் ரொம்பவே குஷியா இருந்தான்...
சாயந்தர நேரத்தில ரெண்டுபேரும் விளையாடும் போது ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த சின்னப்பையன் இவன வேகமா அடிச்சிட்டான்... அடிச்சதோட மட்டுமில்லாம நல்லா கடிச்சும் வச்சுட்டான்... இவனுக்கு மட்டும் வலிக்காதா... என்ன நெனச்சானோ அதே வேகத்தில இவனும் அந்த சின்னபையன கடிச்சு வச்சுட்டான்...
அலறி துடிச்சான் சின்னப்பையன்...வந்திச்சு பாருங்க கூட்டம்... இவன போட்டு பொரட்டி எடுத்துட்டாங்க... இவனால ஒண்ணுமே சொல்ல முடில... பயங்கரமான அடி... நேரமாக நேரமாக இவனுக்கு தன்னோட வலியைவிட அந்த சின்னப்பையன் அழுகை தான் ரொம்ப வலிச்சுச்சு... ஆனா இவனுக்கு யாருமே சப்போர்ட் பண்ணல... அடிச்சு தூக்கிப்போட்டுட்டு போயிட்டாங்க...
பாவம் இவன் இன்னைக்கு உயிருக்கு போராடிட்டு, அந்த சின்னப்பையன பத்தியே நெனச்சுட்டு, கண்ணுல கண்ணீர சிந்திட்டு, கூடவே இந்த ஈ கூடவும் போராடிட்டு இருக்கான்...
நேரம் ஆக ஆக இவன் கண்ணுல இருந்து வர்ர கண்ணீர் அதிகமாகிட்டே போச்சு...
கொஞ்சம் நேரம் வரைக்கும் அந்த ஈயை விரட்டிட்டு இருந்தவன்... அப்புறமா முடியாம அப்படியே படுத்துட்டான்...
கடைசியா அந்த ஈ இப்ப மூச்சை நிறுத்தியிருந்த அந்த ஜீவன் மேலே தன்னோட ராஜ்ஜியத்தை நடத்த ஆரம்பிச்சுருச்சு...
கொஞ்ச நேரத்துல அந்த ஜீவனோட தூரத்து உறவுகள், இதுவரை அதன் உறவா இருந்த ஈக்கள "லொள்" "லொள்" என விரட்ட ஆரம்பித்தன....