குணக்கொலை கூடம்

கண்ணுக்கு ரேபானும்,
காதுமடல் பியர்சிங்கும்,
கழுத்திலாடும் பிளாட்டினமும்,
உதட்டிலோடும் ஆங்கிலமுமாய்,
பாதி கிழிந்த ஜீன்ஸோடு -
பைக்கிலே சுற்றுபவன்
என்றால் - எனை
“cool” எனக் கொள்வீரோ?

சகமனிதரை சவலையாக்கும்
சாதி கண்டு பொறுத்திலேன்,
மெல்லினத்தை கசக்கி ருசிக்கும்
மோகிகளை சகித்திலேன்,
கடமை செய்ய கைநீட்டும்
கயவர்களை விடுத்திலேன்,
ஒழுக்கமின்றி விதி மீறும்,
ஒருவனையும் மதித்திலேன்
என்றால் - எனை
கோபக் காரனெனக் கொள்வீரோ?

கனிமொழி நின் குரல்கேட்டு
கவிதைகளை செய்திடுவேன்,
கயல்விழி நின் ஒளிகொண்டு,
காவியங்கள் இயற்றிடுவேன்,
காதலி நீ, உம் என்றால்
கடவுளையும் எதிர்த்திடுவேன்
என்றால் - எனை
காதலனெனக் கொள்வீரோ?

எதையும் நம்பாதீர்!!!
எனை தூற்றிச் சொல்லும்
அறியார் எழுதும்,
குறை வார்த்தைகளை நம்பாதீர்!!!
எனை ஏற்றிச் சொல்லும்,
நானே எழுதும்,
மிகை வார்த்தைகளை நம்பாதீர்!!!

இணையம், இது ஒரு
குணக்கொலை கூடம்.
உண்மை நான் வேண்டுமா?

வாருங்கள்,
அனுமானித்து அவதூற்றும்,
பரிசோதனை மனநிலைகளை
கழற்றி வைத்து விட்டு
இயல்பாக பழகுவோம்.
நாம் யாரென்றறிவோம்.

எழுதியவர் : ஈஸ்வரன் ராஜாமணி (6-Dec-13, 7:46 am)
பார்வை : 85

மேலே