கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம்
கண்ணீர் எழுதும் மறு ஜென்ம சாசனம்.....
======================================
எத்தனையோ
கனவுகளில்... கற்பனைகளில்
நீயும் நானும்
வாழ்ந்த காலங்கள்...
நினைத்துப் பார்க்கிறேன்
பசுமரத்தாணி போல்
நெஞ்சத்தில் பதிவுகள்...
ஒருவரை ஒருவர்
பார்க்காத நாட்களில்
உறங்க மறுத்தும்
கண்ணீர் சிந்தியும்
இடைவெளிகளுக்குப் பின்
காண்கையில்
உவகையில் களித்தும்...
உனக்கும் எனக்குமான
திருமண பேச்சுக்கள்
நம் சந்திப்பின் போதெல்லாம்
வாய் ஓயாமல் பேசியும்...
நடைபெறாத திருமணத்தை
கற்பனையில் நடத்தியும்
கனவுகளில் வாழ்ந்தும்
பிறக்காத குழந்தைகளுக்கு
பெயர் வைத்தும்
மகிழ்ச்சியில் மூழ்கிய காலங்கள்...
உனக்கான துன்பங்களை
நான் சுமந்தும்
என் துயரங்களை
நீ தாங்கியும்...
ஆறுதல் கூறி
ஒருவரை ஒருவர்
தேற்றிய நாட்கள்...
நீங்காத நினைவுகளாய்
காலங்கள் கடந்தும்....
நினைத்த பொழுதினில்
விழிகள் தடாகக் குளியலில்
கரிப்பு மையதனில்
கன்னங்களில் கவிதைகளாய்....
தீட்டிய கவிதைகளும்
பிறர் உணரா வண்ணம்
மூடியும் மறைத்தும்...
தனிமையில்
முணகலாய் வெடித்தும்...
நம் திருமணம்.... நம் வாழ்க்கை...
நம் குழந்தைகள்.... நம் எதிர்காலம்...
நம்முடையதான பேச்சுக்களுக்கெல்லாம்
முற்றுப் புள்ளியாய்
உன் திருமண அழைப்பிதழ்.....
நாம் என்பது. நான், நீ என்றாகி
நமது என்றதெல்லாம்
உனது, எனது என மாறி
நீயொரு திசை, நான் ஒரு திசையாகி
பிரிந்தாலும் மறவாதவராகி ....
கனவுகளை புலனடக்கம் செய்ததாகி...
நினைவுகள் மட்டும்
என்றும் நீங்காததாகி
வாழ்தலே கொடுமையாகி
உயிரோட்டமில்லா வாழ்க்கையை
உணர்ச்சி தொலைத்து
வாழ்ந்த காலங்கள்...
பெற்றோரின், மற்றோரின்
மகிழ்ச்சிக்காக
நம் மகிழ்ச்சிகள்
மரணித்துதான் போய்விட்டது
நாம் மட்டும் மரணிக்காமல்..
வருடங்கள் கடந்து
வாழ்க்கையை கடந்து
பிறவி முடிக்கும் நேரம்
மீண்டுமொரு சந்திப்பு...
பேசியே களித்த உதடுகளில்..
பனிப் பிரதேச உதறல்கள்
வார்த்தைகளின்றி
பேசிய விழிகளில் நீரோட்டம்...
கரங்களைப்
பிணைத்துக் கொள்ளலாமா??
பிணைத்துக் கொள்வது
சரியா?? ... தவறா??
பட்டி மன்றக் கேள்விகளை
உதறித் தள்ளிவிட்டு
பற்றிக் கொண்ட கரங்களில்
பெருக்கெடுத்து விழும் கண்ணீர்
உடன்படிக்கை ஒன்றை
எழுதிக் கொண்டிருந்தது
"மறு ஜென்மத்தில்
உங்கள் கரங்கள்
இணைந்தே இருக்கட்டும்
நான் மட்டும் உங்களைக்
காணப் போவதில்லை..
இனி வரும் ஜென்மங்களில்
நீங்கள் இருவருமாய் இணைந்தே....
கடைசியாக உங்கள் இருவரையும்
கொஞ்சம் வருடிக் கொள்கிறேன்...”