ஒழிக்கணும்

நாளெல்லாம்
உழைத்து களைத்த
பறவை அவள்
சிறகொடிந்த கிளியாய் தம்
சிறுகூட்டிற்குள்
உழைப்பு தந்த
அழற்சியினால்
ஆழ்ந்து உறங்கிருந்தாள்.....!!!!

கடுவன் பூனை போன்று
கண்ணில் புயல் ஏந்தி
கட்டிய கணவனாம்
கார் குழலாள் அவளை
கருநாகமென சீறி
கால்களால் தீண்டினான் ...!!!

விழி தடுமாற
விதிர்ப்புற எழுந்து
தளர் நடையிட்டு
ஏனய்யா தாமதம்
செய்கூலி கொடுத்தனரோ
நடுநிசி ஆயிற்றே என
நயத்துடன் வினவினாள்....!!!

உண்ட கொழுப்பினிலே இது
உரைதிட்டாயோடி
சகதியில் கால் வைத்து
சனியனை கை பிடித்தேன் என
குடித்துள மயக்கத்தாலே
குழறியபடி பேசினான் ...!!!

வார்த்தை கணைகளை
வஞ்சியின் மேல்
கண்டபடி வீசியபோதும்
கண்ணில் பெருகிய
அருவியை துடைத்தவாறு
உண்ணாமல் உறங்காதேயும்
உடலது கெட்டுப்போகும்
கண்மணி அவள்
மொழிந்ததை கேளாமலே
கேழல் என உறங்கிப்போனான்.....!!!!

தெருவில் நாயது
ஓலமிடும் ஓ சையை கேட்டே
கணவன் அவன் செய்கையை
அதனுடன் உவமித்து பார்த்தே
நங்கை அவள் மனதுக்குள்
நகைத்துக்கொண்டாள்......!!!

தேன் உண்ட குரங்காய்
அன்னவன் மாறினாலே
அனுதினமும்அல்லல்பட்டு
அழுகின்றோம் நாமும்
மதுதனை ஓழித்திட்டால்
மங்காத வாழ்வு வாழ்ந்தே
குன்றின் மேல் ஏற்றிட்ட
விளக்காய் இடர்தனை நீக்கி
இன்பவாழ்வு வாழலாம் ......!!!

பொருளில்லார் வாழும்
வாழ்வு இப்புவியில்
நிலையானதல்ல
அருளில்லார் இல்லாமல்
அண்டத்தில் வாழ்வதெப்படி .....!!!!

கண்ணீர் சிந்தும் விழிகளை
கனிவுடன் துடைக்க
அரியணையில் அமர்பவர்கள்
அரியதிட்டம் தீட்டினால்
பழியார் பழிக்காமல்
பாசத்துடன் வாழ்ந்திடலாம்
பலபல எண்ணியவாறு
பாவை மீண்டும்
படுத்துறங்கினாள் .....!!



(நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி இது நிறைய
பெண்களுக்கு விடியல் என்பதே இல்லை .மது
ஒழிப்பு திட்டம் கொண்டுவர வேண்டும் .நாட்டில்
நடக்கும் பல குற்றங்களுக்கு மதுவேகாரணம்
என எண்ணுகிறேன்.ஏற்பீர்கள் என நினைக்கிறேன் )

எழுதியவர் : umamaheshwari kannan (21-Dec-13, 7:14 pm)
Tanglish : ozhikkanum
பார்வை : 134

மேலே